செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது ஒரு சில வல்லரசு நாடுகளின் கைகளில் மட்டுமே சிக்கிவிடக்கூடாது என்றும், அதன் பலன்கள் உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்றும் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தியா இன்று உலகப் பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல், சர்வதேச விவகாரங்களிலும் மிக முக்கியப் பங்காற்றி வரும் ஒரு வெற்றிகரமான வளர்ந்து வரும் பொருளாதார நாடு. எனவே, AI-யின் அபரிமிதமான ஆற்றல் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து ஆழமாக விவாதிப்பதற்கு இந்தியா சரியான தளமாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த உச்சி மாநாடானது 'உலகளாவிய தெற்கு' (Global South) எனப்படும் வளரும் நாடுகளில் நடத்தப்படும் முதல் பிரம்மாண்டமான AI மாநாடாகும். பிப்ரவரி 16 முதல் 20 வரை பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், பிரேசில் அதிபர் லுலா டா சில்வா உள்ளிட்ட உலகத் தலைவர்களும், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்களும் பங்கேற்கின்றனர். 'மக்கள், பூமி மற்றும் முன்னேற்றம்' (People, Planet and Progress) ஆகிய மூன்று முக்கியக் கொள்கைகளின் அடிப்படையில் இந்த மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது.
வளர்ந்த நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் என அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படும் ஒரு பன்முகத்தன்மை கொண்ட உலகத்தையே தாம் விரும்புவதாக குட்டரெஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் சீனா போன்ற வல்லரசுகளுக்கு இடையேயான போட்டியாக மட்டும் AI மாறிவிடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக உள்ளார். ஒரு நியாயமான சர்வதேச அமைப்பை உருவாக்குவதில் இந்தியாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றும், இது குறித்து பிரதமர் மோடியுடன் விரிவாக ஆலோசிக்கத் தாம் ஆவலாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியா பல நூற்றாண்டுகளாக உலக மாற்றத்திற்கான ஒரு மையப்புள்ளியாக இருந்து வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டிய ஐநா பொதுச் செயலாளர், இந்திய கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் மீது தமக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும் குறிப்பிட்டார். இந்த மாநாட்டின் மூலம் உலகளாவிய AI நிர்வாகத்தில் இந்தியாவின் குரல் வலுவாக ஒலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐநா சபையின் தொழில்நுட்பத் தூதர் அமன்தீப் சிங் கில் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
.jpg)