GO BACK

சிறுபான்மையினருக்குச் சாவுமணி? - டிரம்ப் கையில் எடுத்திருக்கும் 'America Prays' ஆயுதம்

அமெரிக்காவில் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் 'திருச்சபை மற்றும் அரசு பிரிவினை' (Separation of Church and State) எனும் கொள்கையை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் மெல்ல மெல்லத் தகர்த்து வருவதாக செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக, ட்ரம்ப் அமைத்துள்ள 'மத சுதந்திர ஆணையம்', வரும் கோடை காலத்திற்குள் அரசாங்கத்தின் கொள்கைகளில் மதத்தின் பங்கை அதிகரிப்பதற்கான ஒரு விரிவான வரைபடத்தை (Blueprint) வெளியிடத் திட்டமிட்டுள்ளது. "அமெரிக்காவில் மீண்டும் மதத்தைக் கொண்டு வர வேண்டும்; முன்பை விட வலிமையாக அதைக் கொண்டு வருவோம்" என்று ட்ரம்ப் இந்த ஆணையத்திடம் தெரிவித்துள்ளார்.

அரசு இயந்திரங்களுக்குள் மத ரீதியான செயல்பாடுகள் ஊடுருவத் தொடங்கியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. உதாரணமாக, டிசம்பர் மாதம் நடைபெற்ற நுகர்வோர் நிதிப் பாதுகாப்பு வாரியத்தின் (CFPB) ஆலோசனைக் கூட்டமானது, ஒரு வெள்ளை மாளிகை அதிகாரியின் கிறிஸ்தவ ஜெபத்துடன் தொடங்கியது. "எங்கள் பாவங்களுக்காகத் தன் உயிரைத் தந்த இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி" என்று அந்த அதிகாரி வேண்டியுள்ளார். முந்தைய ஆட்சிகளில் அரிதாகக் கருதப்பட்ட இத்தகைய நிகழ்வுகள், தற்போது ட்ரம்ப் ஆட்சியில் சாதாரணமான ஒன்றாக மாறி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், சில அரசுத் துறைகளில் வழக்கமான மத வழிபாட்டுச் சேவைகளும், சமூக ஊடகங்களில் விவிலிய வசனங்களும் இடம்பெறத் தொடங்கியுள்ளன.

இந்த 'மத சுதந்திர ஆணையம்' தற்போது பல சிக்கல்களையும் சந்தித்து வருகிறது. ஆணையத்தின் தலைவரும் டெக்சாஸ் துணை ஆளுநருமான டான் பேட்ரிக் (Dan Patrick), ஆணையத்தின் உறுப்பினர் கேரி பிரீஜியன் போலரை (Carrie Prejean Boller) அண்மையில் நீக்கம் செய்துள்ளார். யூத எதிர்ப்பு  குறித்த விசாரணையின் போது, சர்ச்சைக்குரிய கேண்டஸ் ஓவன்ஸிற்கு ஆதரவாகப் பேசியதற்காக அவர் நீக்கப்பட்டார். இந்த ஆணையம் பெரும்பாலும் 'கிறிஸ்தவ தேசியவாத' கொள்கைகளைக் கொண்டவர்களால் நிரப்பப்பட்டுள்ளதாகவும், இது மற்ற சிறுபான்மை மதங்களுக்கு எதிரானது என்றும் கூறி பல்வேறு மத அமைப்புகள் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக வழக்குப் தொடர்ந்துள்ளன.

பழமைவாத அமைப்புகள் இந்த மாற்றங்களை வரவேற்றாலும், மதச் சுதந்திர ஆர்வலர்கள் கடும் கவலை தெரிவித்துள்ளனர். அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு (கிறிஸ்தவம்) முன்னுரிமை அளிப்பது அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்திற்கு (First Amendment) எதிரானது என அவர்கள் வாதிடுகின்றனர். எனினும், ட்ரம்ப் நிர்வாகம் 'America Prays' போன்ற திட்டங்கள் மூலம் பொதுவெளியில் மதத்தின் இருப்பை உறுதிப்படுத்துவதில் உறுதியாக உள்ளது. ஜூலை 4, 2026-ல் அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டைக் கொண்டாடும் வேளையில், இந்த ஆணையம் தனது இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்க உள்ளது, அது அமெரிக்காவின் மத மற்றும் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமையக்கூடும்.