"ஊழல் பற்றி பேசும் விஜய்க்கு செக்!" - புலி பட விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு: அரசியலில் சறுக்கலா?
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, தீவிர அரசியலில் இறங்கியுள்ள நடிகர் விஜய், தனது மேடைப் பேச்சுகளில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளையும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக, திமுகவைத் "தீய சக்தி" என்றும், அதிமுகவை "ஊழல் கட்சி" என்றும் சாடிய அவர், "நான் ஊழல் செய்ய மாட்டேன், எனக்கு அந்தத் தேவையும் இல்லை" என்று உறுதிபடப் பேசியிருந்தார்.
ஊழலற்ற ஆட்சியை வழங்குவேன் என அவர் முழக்கமிட்டு வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு நீதிமன்றத் தீர்ப்பு அவருக்குப் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படத்திற்காக விஜய் பெற்ற சம்பளத்தில், சுமார் 15 கோடி ரூபாயைக் கணக்கில் காட்டவில்லை என வருமான வரித்துறை கண்டுபிடித்தது.
இதற்காக அவருக்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தை எதிர்த்து விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. படம் வெளியாகி ஏழு ஆண்டுகள் கழித்து, விதிமுறைகளை மீறி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால் அதை ரத்து செய்ய வேண்டும் என விஜய் தரப்பு வாதிட்டது. ஆனால், இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம், வருமான வரித்துறை விதித்த அபராதம் செல்லும் என இன்று அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.
விஜய் ஒரு நடிகராக மட்டும் இருந்திருந்தால் இந்தத் தீர்ப்பு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்காது. ஆனால், தற்போது அவர் ஒரு கட்சியின் தலைவராக "தூய்மையான அரசியல்" பற்றிப் பேசி வருவதால், எதிர்க்கட்சிகளுக்கு இது ஒரு வலிமையான ஆயுதமாகக் கிடைத்துள்ளது.
"சொந்த வருமானத்தையே முறையாகக் கணக்கு காட்டாமல் அபராதம் கட்டிய விஜய், ஊழலைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?" என்ற கேள்வியை திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் முன்வைக்கத் தொடங்கியுள்ளன. அரசியல் களத்தில் தனது நற்பெயரைக் கட்டமைக்க முயன்ற வேளையில், இந்தத் தீர்ப்பு விஜய்யின் அரசியல் இமேஜுக்குச் சிறு சறுக்கலை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.
