அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்திய மாணவர் ஒருவர் கடந்த சில நாட்களாகக் காணாமல் போயிருப்பது இந்தியர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சாகேத் ஸ்ரீனிவாசய்யா (22) என்ற மாணவர், கலிபோர்னியா பெர்க்லே பல்கலைக்கழகத்தில் (UC Berkeley) முதுகலை படித்து வந்தார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மாயமாகியுள்ளார்.
சாகேத் காணாமல் போனது குறித்துப் போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பார்க் ஹில்ஸ் (Park Hills) பகுதியில் உள்ள ஒரு வீட்டின் நுழைவாயில் அருகே அவரது பாஸ்போர்ட், லேப்டாப் மற்றும் பை ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவரது உடைமைகள் சிதறிக்கிடப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
சாகேத் ஸ்ரீனிவாசய்யா சென்னை ஐஐடியில் (IIT Madras) இளங்கலை படிப்பை முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மாயமானது குறித்து சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. மாணவரின் குடும்பத்தினருடன் தூதரக அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் போலீஸாருடன் இணைந்து தேடுதல் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் மர்ம மரணங்கள் அதிகரித்து வரும் வேளையில், இந்தச் சம்பவம் இந்தியச் சமூகத்தினரிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
