ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினர் அலெக்ஸ் டி மினார், யூகோ ஹம்பர்ட்!

நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் ஆண்களுக்கான ஏடிபி (ATP 500) டென்னிஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிச் சுற்றுகளில், நடப்புத் தொடரின் முதல் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் மற்றும் பிரான்ஸ் வீரர் யூகோ ஹம்பர்ட் ஆகியோர் தங்களது எதிராளிகளை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

காலிறுதிச் சுற்றில் நெதர்லாந்து வீரர் போடிக் வான் டி சாண்ட்ஷுல்ப் (Botic van de Zandschulp) என்பவரை எதிர்கொண்ட அலெக்ஸ் டி மினார், ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் விளையாடிய போடிக் வான் டி, கடும் சவாலை அளித்த போதிலும், டி மினார் தனது துல்லியமான சர்வீஸ்கள் மூலம் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ் நாட்டின் யூகோ ஹம்பர்ட் (Ugo Humbert), ஸ்பெயின் வீரர் ஜாமே முனார் (Jaume Munar) என்பவரை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஹம்பர்ட் 6-3, 7-6 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்றார். முன்னதாக, இந்தத் தொடரின் முதல் சுற்றில் முன்னாள் சாம்பியன் டேனில் மெட்வதேவை வீழ்த்தி ஹம்பர்ட் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது அரையிறுதிக்கு முன்னேறியுள்ள அலெக்ஸ் டி மினார் மற்றும் யூகோ ஹம்பர்ட் ஆகியோர், இறுதிப்போட்டிக்கு முன்னேற வரும் சுற்றுகளில் பலப்பரிட்சை நடத்த உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தத் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறி ரன்னர்-அப் பட்டம் வென்ற அலெக்ஸ் டி மினார், இந்த முறை எப்படியாவது சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார்.

Previous Post Next Post

Contact Form