GO BACK

மோடி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரிசையில் விஜய்!செய்தியாளர்களைச் சந்திக்காவிட்டால் என்ன சீண்டும் பாண்டே!

நடிகராக இருந்து அரசியல் தலைவராக மாறியுள்ள விஜய் மீது அரசியல் எதிரிகளால் வைக்கப்படும் பிரதான விமர்சனம், அவர் செய்தியாளர்களைச் சந்திப்பதில்லை என்பதுதான். திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள், ஊடகங்களைச் சந்திக்காமல் ஒருவரால் எப்படித் தலைவராக முடியும்? என்று கேள்வி எழுப்பி வருகின்றன. சமீபத்தில் கரூரில் 41 பேர் உயிரிழந்தபோது கூட, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரை அழைக்க முயன்றபோது, விஜய் அதைக் கண்டுகொள்ளாமல் சென்றது சமூக வலைதளங்களில் விவாதமானது.

இந்த விமர்சனங்கள் குறித்து ஊடகம் ஒன்றில் பேசிய ரங்கராஜ் பாண்டே, விஜய்க்கு ஆதரவாகப் பல வரலாற்று உதாரணங்களைச் சுட்டிக்காட்டினார். விஜய் செய்தியாளர்களைச் சந்திக்காததால் என்ன பெரிய பாதிப்பு வந்துவிடும்? இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களைச் சந்திக்கிறாரா? மறைந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தினமும் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார்களா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், டிடிவி தினகரன் போன்ற தலைவர்கள் தினமும் ஊடகங்களைச் சந்திக்கிறார்கள். ஆனால், அவர்களை மக்கள் பெரிய இடத்தில் கொண்டு போய் வைத்துவிட்டார்களா? அல்லது ஊடகங்கள்தான் அவர்களைச் சிறந்த தலைவர்கள் என்று கொண்டாடுகிறதா? மக்களிடம் செல்வாக்கைப் பெறுவதற்கும், செய்தியாளர்களைச் சந்திப்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று பாண்டே மிக வெளிப்படையாகத் தெரிவித்தார்.

முன்னாள் தலைவர்கள் மக்கள் மீது நம்பிக்கை வைத்து, அவர்களின் ஆதரவைப் பெற்றுத்தான் உயர்ந்த நிலைக்கு வந்தார்களே தவிர, ஊடக வெளிச்சத்தால் மட்டும் அல்ல என்பது அவரது வாதமாக இருந்தது. விஜய்யின் இந்த மௌனம் அவரது அரசியல் யுக்தியாகக் கூட இருக்கலாம் என்றும், வாக்குகளைப் பெறுவதற்கு ஊடகச் சந்திப்புகள் அவசியமில்லை என்றும் ரங்கராஜ் பாண்டே குறிப்பிட்டது, விஜய்யின் ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.