கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் செருபுழா பகுதியைச் சேர்ந்தவர் அம்பத்து எலியாஸ் (வயது 62). இவர் கடந்த 40 ஆண்டுகளாகக் கண்ணூர் மற்றும் அதன் அண்டை மாவட்டமான காசர்கோடு மலைப்பகுதிகளில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துத் தீவிரமாக விவசாயம் செய்து வந்தார். சிறந்த காய்கறி விவசாயிக்கான கேரள அரசின் முதலமைச்சர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் இவர். மற்ற விவசாயிகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த இவரே தற்கொலை செய்துகொண்டது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகப் பயிர் விளைச்சல் சரிந்ததாலும், சந்தையில் விளைபொருட்களுக்குப் போதிய விலை கிடைக்காததாலும் எலியாஸ் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வந்துள்ளார். இந்த நடப்புப் பருவத்தில் மட்டும் சுமார் 2,500 வாழைக்கன்றுகளை அவர் நட்டிருந்தார். ஆனால், எதிர்பார்த்த வருமானம் கிடைக்காத நிலையில், வங்கிகளிலும் தனிநபர்களிடமும் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இவருக்கு சுமார் 40 லட்சம் ரூபாய் வரை கடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.
பிப்ரவரி 11-ம் தேதி காலை தனது பண்ணை நிலத்தில் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்த நிலையில் எலியாஸ் மயங்கிக் கிடந்துள்ளார். அதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கண்ணூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு நான்கு நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் போராடிய அவர், சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 15-ம் தேதி அதிகாலை உயிரிழந்தார். அரசு வழங்க வேண்டிய மானியத் தொகை ரூ.1.14 லட்சம், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகுதான் அனுமதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு மானியம் வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதமே இந்தத் தற்கொலைக்கு முக்கியக் காரணம் என உறவினர்கள் மற்றும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். உழைப்பால் பல விருதுகளைக் குவித்த ஒரு விவசாயி, வெறும் சில லட்சங்கள் கடனுக்காகத் தனது உயிரை மாய்த்துக்கொண்டது கேரள அரசியலில் விவாதங்களை எழுப்பியுள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகள் மற்றும் மானியங்களை உரிய நேரத்தில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
.jpg)