GO BACK

அம்பானிக்கு அடித்த ஜாக்பாட்: வெனிசுலாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா அனுமதி!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL), வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெயை நேரடியாக வாங்குவதற்கான 'பொது உரிமத்தை' (General License) அமெரிக்க அரசிடம் இருந்து பெற்றுள்ளது. இது ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒரு மிகப்பெரிய நிதி லாபத்தையும், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு ஒரு முக்கிய வலுவையும் கொடுத்துள்ளது.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ பிடிபட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தளர்த்தத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்தியாவின் மிகப்பெரிய தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ், தடைகளை மீறாமல் நேரடியாக எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்காவின் வெளிநாட்டு சொத்துக்கள் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC) அனுமதி அளித்துள்ளது.

உக்ரைன் போருக்குப் பிறகு இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கி வந்தது. ஆனால், அமெரிக்காவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்தின்படி, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துக்கொள்ளத் தொடங்கியுள்ளது. இதற்குப் பதிலாக, வெனிசுலாவின் 'ஹெவி குரூட்' (Heavy Crude) வகை எண்ணெய் ரிலையன்ஸின் ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலைக்கு மிகவும் ஏற்றது. வெனிசுலா எண்ணெய் சர்வதேச சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில் (தள்ளுபடியில்) கிடைப்பதால், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு இது மிகப்பெரிய லாபத்தை (Refining Margins) ஈட்டித் தரும்.

மெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் சமீபத்தில் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, இந்தியப் பொருட்களின் மீதான 25% கூடுதல் வரியை நீக்கினார். இதற்கு ஈடாக, இந்தியா அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிலிருந்து அதிக எண்ணெய் வாங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த அரசியல் மற்றும் வர்த்தக மாற்றங்களின் பலனாகவே ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு இந்தச் சிறப்பு அனுமதி கிடைத்துள்ளது. இதன் மூலம் உலகிலேயே அதிக கச்சா எண்ணெய் இருப்பு கொண்ட வெனிசுலாவிலிருந்து இந்தியா மீண்டும் தடையின்றி எண்ணெய் இறக்குமதி செய்ய வழிவகை ஏற்பட்டுள்ளது.