தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய மதுக்கூர் ராமலிங்கம், தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) மிகக் கடுமையாக விமர்சித்தார். "விஜய்யின் பிரச்சார வாகனத்தைப் பார்த்தால் எனக்கு எமன் ஏறும் எருமை மாடு போலத்தான் தோன்றுகிறது. அந்த வாகனம் எங்குச் சென்றாலும் ஒரு உயிர் பலி இல்லாமல் திரும்புவதில்லை" என்று அவர் அதிரடியாகக் குற்றம் சாட்டினார். சமீபகாலமாகத் தவெக நிகழ்ச்சிகளில் நடைபெறும் விபத்துகளை மையமாக வைத்து இந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
மதுக்கூர் ராமலிங்கம் தனது உரையில் விபத்துகளின் பட்டியலையும் சுட்டிக்காட்டினார். "மதுரை மாநாட்டின் போது 3 பேர், திண்டிவனத்தில் 2 பேர், கரூரில் 41 பேர் என உயிரிழப்புகள் தொடர்கின்றன. நேற்று சேலத்தில் நடைபெற்ற கூட்டத்திலும் வட இந்தியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிழைப்புக்காக வந்த இடத்தில் இப்படி ஆகிவிட்டதே" என்று அவர் வேதனை தெரிவித்தார். மக்கள் கூட்டம் கூடும் இடங்களில் முறையான பாதுகாப்பு மற்றும் மேலாண்மை இல்லாததையே இது காட்டுவதாக அவர் விமர்சித்தார்.
மேலும், விஜய்யின் சமீபத்திய பேச்சு குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். "தான் கட்சி ஆரம்பித்து ஒரு சதவீத வாக்குகள் வாங்கும் தில் மற்றவர்களுக்கு இருக்கிறதா என விஜய் கேட்கிறார். இதன் மூலம் தனது கட்சி ஒரு சதவீதத்திற்கு மேல் தேறாது என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார். தன் சொந்தக் கட்சிக்கே 'கால்ஷீட்' கொடுக்கும் ஒரே தலைவர் விஜய்தான்" என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். தவெக என்பது ஒரு அரசியல் கட்சியைப் போலத் தெரியவில்லை என்றும், அது ஒரு நாடக கம்பெனியைப் போலச் செயல்படுவதாகவும் அவர் சாடினார்.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள சூழலில், இடதுசாரித் தலைவரின் இந்த விமர்சனம் தவெக தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசியதற்கும் மதுக்கூர் ராமலிங்கம் கண்டனம் தெரிவித்தார். "அரசியல் ரீதியாக விமர்சிக்க வேண்டுமே தவிர, ஒரு பெண்ணைப் பற்றியோ அல்லது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தோ பேசுவது அநாகரிகமானது" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
.jpg)