எப்ஸ்டீன் ஒரு தனிநபர் மட்டுமல்ல, அவர் ஒரு பெரும் அதிகார மையமாகத் திகழ்ந்திருக்கிறார். தனது 'லோலிடா எக்ஸ்பிரஸ்' (Lolita Express) என்ற தனி விமானம் மற்றும் 'லிட்டில் செயின்ட் ஜேம்ஸ்' என்ற ரகசிய தீவு ஆகியவற்றைப் பயன்படுத்தி, பெரும் பணக்காரர்களையும் அதிகார வர்க்கத்தையும் தன் கைக்குள் வைத்திருந்தார். தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி, அறிவியல் ஆராய்ச்சிக்கு ஆதரவு என நல்லவர் போல வேடமிட்டு, பலரைத் தனது வலைக்குள் இழுத்திருக்கிறார். குறிப்பாக, பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஆண்ட்ரூவின் பெயரும், அவர் தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளது லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனைக்கே பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆவணங்களின்படி, எப்ஸ்டீன் வெறும் பாலியல் குற்றங்களை மட்டும் செய்யவில்லை; மாறாக, பெரும் தலைவர்களின் ரகசியங்களை அறிந்து வைத்துக்கொண்டு அவர்களை பிளாக்மெயில் செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் வலுத்துள்ளது. பில் கேட்ஸ் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்களிடம் கூட அவர் தனது செல்வாக்கைச் செலுத்த முயன்றது தற்போது தெரியவந்துள்ளது. "பணத்தாசை பிடித்தவர்கள், அதிகார போதையில் இருந்தவர்கள் மற்றும் கவனக்குறைவாக இருந்த புத்திசாலிகள்" என ஒரு பெரும் பட்டாளத்தையே அவர் தனது ரகசியத் தீவில் விருந்து வைத்து, பின் அந்த ரகசியங்களை வைத்தே ஆட்டிப்படைத்திருக்கிறார் என்பதுதான் இதில் உள்ள கசப்பான உண்மை.
தற்போது அமெரிக்க நீதிமன்ற உத்தரவுப்படி வெளியாகியுள்ள இந்த 'எப்ஸ்டீன் பைல்கள்' (Epstein Files), பல நாடுகளின் அரசியலையே புரட்டிப்போட்டுள்ளது. பிரிட்டனின் முன்னாள் தூதர் பீட்டர் மேண்டல்சன் முதல் பல்வேறு நாடுகளின் தொழிலதிபர்கள் வரை பலரும் எப்ஸ்டீனுடனான தொடர்பால் பதவிகளை இழந்து வருகின்றனர். "வேலியே பயிரை மேய்ந்த கதை"யாக, சமூகத்தில் பெரும் அந்தஸ்தில் இருந்தவர்களே இத்தகைய அருவருப்பான செயல்களில் ஈடுபட்டிருந்தது பொதுமக்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. நீதி இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை என்றும், உண்மையான குற்றவாளிகள் இன்னும் அதிகாரத்தின் நிழலில் ஒளிந்து கொண்டிருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
