GO BACK

மாஸ்கோவில் பயங்கரம்: ரஷ்ய உளவுப்பிரிவு தளபதி மீது துப்பாக்கிச் சூடு - பின்னணி என்ன?

ரஷ்ய ராணுவத்தின் மிக முக்கியப் புள்ளிகளில் ஒருவரான விளாடிமிர் அலெக்ஸீவ், கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6, 2026) காலை மாஸ்கோவின் வடமேற்குப் பகுதியில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பு அருகே மர்ம நபரால் சுடப்பட்டார். அவர் தனது குடியிருப்பின் மின் தூக்கி (Elevator) அருகே இருந்தபோது, மர்ம நபர் அவரது முதுகில் பலமுறை சுட்டுவிட்டுத் தப்பியோடியதாகத் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது அவர் கிரிட்டிக்கலான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விளாடிமிர் அலெக்ஸீவ் சாதாரண அதிகாரி அல்ல; உக்ரைன் மீதான போர் நடவடிக்கைகளில் இலக்குகளைத் தீர்மானிப்பதிலும், உளவுத் தகவல்களைச் சேகரிப்பதிலும் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு. மேலும், 2023-ம் ஆண்டு நடைபெற்ற வாக்னர் குழுவின் கிளர்ச்சியின் போது, அதன் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜினுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர்களில் இவரும் ஒருவர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளால் பல்வேறு தடைகளுக்கு உள்ளான இவர், 2018-ம் ஆண்டு பிரிட்டனில் நடந்த 'நோவிசோக்' விஷ தாக்குதல் வழக்கிலும் தேடப்படும் நபராகக் கருதப்படுகிறார்.

இந்தத் தாக்குதல் குறித்து ரஷ்யாவின் புலனாய்வுக் குழு (Investigative Committee) வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. தாக்குதல் நடத்திய நபர் ஒரு டெலிவரி மேன் போல வேடமணிந்து வந்து இந்தச் செயலைச் செய்ததாகச் சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மாஸ்கோ முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, தப்பியோடிய நபரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இருப்பினும், இதுவரை யாரும் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை.

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இந்தத் தாக்குதலை ஒரு "பயங்கரவாதச் செயல்" என்று விமர்சித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளைச் சீர்குலைப்பதற்காகவே உக்ரைன் தரப்பில் இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். உக்ரைன் தரப்பிலிருந்து இதற்கு நேரடிப் பதில் ஏதும் வராத போதிலும், உக்ரைன் ஆதரவு சமூக வலைதளப் பக்கங்களில் இச்சம்பவம் குறித்துப் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

கடந்த ஓராண்டில் மட்டும் மாஸ்கோ மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்தது மூன்று ரஷ்ய ஜெனரல்கள் இத்தகைய தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர். கார் குண்டு வெடிப்பு மற்றும் மர்மத் தாக்குதல்கள் மூலம் உயர்மட்ட அதிகாரிகள் குறிவைக்கப்படுவது ரஷ்யப் பாதுகாப்புத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் ரஷ்யாவின் உள்நாட்டுப் பாதுகாப்பில் உள்ள ஓட்டைகளை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.