ஈரானின் அணுசக்தி திட்டங்கள் குறித்து நிலவும் நீண்டகாலப் சர்ச்சைகளுக்குத் தீர்வு காணும் வகையில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதிநிதிகள் பங்கேற்கும் இரண்டாம் சுற்று ‘மறைமுக’ பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது. ஓமன் நாட்டின் மத்தியஸ்தத்தில் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சிறப்புத் தூதர்கள் ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) மற்றும் ஜாரெட் குஷ்னர் (Jared Kushner) பங்கேற்கின்றனர். ஈரான் தரப்பில் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரகச்சி (Abbas Araghchi) தலைமையிலான குழுவினர் கலந்து கொள்கின்றனர். பிப்ரவரி 6-ம் தேதி ஓமனில் நடைபெற்ற முதற்கட்டப் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக இது அமைகிறது.
இந்தப் பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையே ராணுவப் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா தனது 'யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு' (USS Gerald R. Ford) உள்ளிட்ட போர் விமானம் தாங்கிக் கப்பல்களை வளைகுடா பகுதிக்கு அனுப்பியுள்ளது. இதற்குப் பதிலடியாக, ஈரானின் புரட்சிகரக் காவல்படை ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) பிரம்மாண்டமான கடற்படை ஒத்திகையை இன்று தொடங்கியுள்ளது. அணுசக்தி ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில், அமெரிக்கா தாக்கினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரானும் அறிவித்துள்ளது.
பேச்சுவார்த்தையில் சில முக்கியத் தளர்வுகளை அளிக்க ஈரான் முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, தன்னிடம் உள்ள 60% செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் அளவைக் குறைக்க ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தனது ஏவுகணைத் திட்டம் மற்றும் பிராந்தியக் குழுக்களுக்கான ஆதரவு குறித்துப் பேச முடியாது என்பதில் ஈரான் பிடிவாதமாக உள்ளது. மறுபுறம், அணுசக்தி கட்டமைப்பை முழுமையாக முடக்க வேண்டும் என்றும், கடுமையான ஆய்வுகளுக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்துகிறது. பொருளாதாரத் தடைகளை நீக்கினால் மட்டுமே அணுசக்தித் திட்டத்தில் சமரசம் செய்ய முடியும் என்பது ஈரானின் முக்கிய நிபந்தனையாக உள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் இந்தப் பேச்சுவார்த்தை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை பேச்சுவார்த்தை தோல்வியடைந்து போர் மூளும் அபாயம் ஏற்பட்டால், எண்ணெய் விலை 10-20% வரை உயரக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். மாறாக, ஏதேனும் ஒரு சிறிய உடன்பாடு எட்டப்பட்டால் உலகளாவிய சந்தைகளில் நிலவும் பதற்றம் தணியும். முன்னதாக, ஈரானின் போராட்டக் களத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சூழலில், உள்நாட்டு நெருக்கடி மற்றும் சர்வதேசப் பொருளாதாரத் தடைகளில் இருந்து மீள ஈரான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
.jpg)