GO BACK

லண்டன்: சிறுமிகளைத் துஷ்பிரயோகம் செய்து 'ஜின்' மற்றும் 'சூனிய' மிரட்டல் விடுத்த இமாம்

 

கிழக்கு லண்டனில் உள்ள மசூதி ஒன்றில் முன்னாள் இமாமாகப் பணியாற்றிய அப்துல் ஹலீம் கான் (54), சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிராகப் புரிந்த தொடர் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்காக ஸ்னேர்ஸ் ப்ரூக் (Snaresbrook) கிரவுன் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2004 முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான 11 ஆண்டுகளில், 12 வயது சிறுமிகள் உட்பட மொத்தம் ஏழு பேரை அவர் கொடூரமாகத் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. தனது மதப் பதவியைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களுக்கு வரவழைத்து இத்தகைய இழிவான செயல்களில் அவர் ஈடுபட்டுள்ளார். London: Imam who abused girls and issued 'Jinn' and 'Black Magic' threats found guilty

பாதிக்கப்பட்டவர்களைக் கட்டுப்படுத்த அப்துல் ஹலீம் கான் 'ஆன்மீக சக்திகளை' ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளார். தான் ஒரு 'ஜின்' (Jinn - இஸ்லாமிய நம்பிக்கையிலுள்ள ஒரு ஆன்மா) போல உருமாறும் சக்தி படைத்தவன் என்றும், தனது பேச்சைக் கேட்காவிட்டால் ஜின்கள் மூலம் அவர்களுக்குத் தீங்கு விளைவிப்பேன் என்றும் கூறி அச்சறுத்தியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தை வெளியில் சொன்னால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு 'செய்வினை' அல்லது 'பில்லி சூனியம்' (Black Magic) வைத்து விடுவதாகவும் அவர் மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இத்தகைய மூடநம்பிக்கை சார்ந்த மிரட்டல்களால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட காலம் அமைதி காத்து வந்துள்ளனர்.

சுமார் 11 ஆண்டுகாலமாக மறைக்கப்பட்டிருந்த இந்தக் கொடூரங்கள், கடந்த 2017-ஆம் ஆண்டு பாதிக்கப்பட்டவர்களில் மிக இளைய பெண் ஒருவர் தனது பள்ளியில் இருந்த ஆசிரியரிடம் உண்மையை வெளிப்படுத்தியபோது வெளிச்சத்திற்கு வந்தன. இதனைத் தொடர்ந்து மெட்ரோபாலிட்டன் பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில், 50-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்றும், தமக்கெதிராக சதி செய்யப்படுவதாகவும் நீதிமன்றத்தில் கான் வாதிட்டார். இருப்பினும், ஆதாரங்களின் அடிப்படையில் 9 கற்பழிப்பு (Rape) குற்றச்சாட்டுகள் உட்பட மொத்தம் 21 பிரிவுகளின் கீழ் அவர் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தத் தீர்ப்பு குறித்துக் கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், சிறுவயதில் தமக்கு நேர்ந்த இந்தத் துயரம் தமது வாழ்நாள் முழுவதையும் பாதித்துள்ளதாக உருக்கமாகத் தெரிவித்துள்ளார். "யாரை நம்புவது என்ற நம்பிக்கையையே இந்தச் சம்பவம் சிதைத்துவிட்டது" என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டார். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்துல் ஹலீம் கானுக்கான தண்டனை விபரங்கள் வரும் மே மாதம் 14-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. லண்டன் வாழ் முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தத் தீர்ப்பு, குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.