GO BACK

ஸ்மிருதி மந்தனா - பாலஷ் முச்சல் திருமண சர்ச்சை: அவதூறு பரப்பிய நடிகருக்கு மும்பை உயர்நீதிமன்றம் அதிரடித் தடை!

திரைப்பட இசையமைப்பாளரும் இயக்குநருமான பாலஷ் முச்சல் (Palash Muchhal), தன் மீது பாலியல் புகார்கள் மற்றும் பண மோசடி புகார்களைப் பரப்பிய மராத்தி நடிகர் வித்யான் மானேவுக்கு (Vidnyan Mane) எதிராகத் தொடர்ந்த 10 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழக்கில், மும்பை உயர்நீதிமன்றம் தற்போது இடைக்காலத் தடை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுடனான திருமணம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், பாலஷ் மீது சுமத்தப்பட்ட அவதூறு கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.

முன்னதாக, வித்யான் மானே சமூக வலைதளங்களில் பாலஷ் முச்சல் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தன்னிடம் படம் எடுப்பதாகக் கூறி 40 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகவும், ஸ்மிருதி மந்தனாவுடன் திருமணம் நடக்கவிருந்த தினத்திற்கு முதல் நாள் பாலஷ் முச்சல் வேறொரு பெண்ணுடன் ரகசியத் தொடர்பில் இருந்ததாகவும், இதனைப் பார்த்த இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் அவரைத் தாக்கியதாகவும் வித்யான் மானே சர்ச்சையைக் கிளப்பினார். இந்த ஆதாரமற்ற புகார்களால் தனது நற்பெயருக்குக் கடும் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறி பாலஷ் முச்சல் நீதிமன்றத்தை நாடினார்.

இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி, ஒருவரின் தனிப்பட்ட கௌரவத்தையும் நற்பெயரையும் ஆதாரமில்லாத பொது வெளி அறிக்கைகள் மூலம் சிதைக்க முடியாது என்று சுட்டிக்காட்டினார். வித்யான் மானே முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லாததை நீதிமன்றம் கவனித்தது. எனவே, பாலஷ் முச்சலுக்கு எதிராக அவதூறான கருத்துக்களையோ அல்லது உண்மைக்குப் புறம்பான தகவல்களையோ சமூக வலைதளங்கள் அல்லது ஊடகங்களில் வெளியிட வித்யான் மானேவுக்கு நீதிமன்றம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது.

இந்தத் தீர்ப்பு குறித்துப் பேசிய பாலஷ் முச்சலின் வழக்கறிஞர் ஸ்ரேயான்ஷ் மிதரே, "இது எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி; உண்மை ஒருநாள் வெல்லும் என்பதற்கு இதுவே சாட்சி" என்று தெரிவித்துள்ளார். 10 கோடி ரூபாய் இழப்பீடு தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அடுத்த விசாரணை மார்ச் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்மிருதி மந்தனாவுடனான காதல் மற்றும் திருமணம் தொடர்பான சர்ச்சைகள் உச்சத்தில் இருந்த நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பாலஷ் முச்சலுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.