ஐஎன்எஸ் அரிதமன் நீர்மூழ்கிக் கப்பலானது, அதற்கு முந்தைய ஐஎன்எஸ் அரிஹந்த் மற்றும் ஐஎன்எஸ் அரிகாட் ஆகியவற்றை விடப் பெரியது மற்றும் அதிக சக்தி வாய்ந்தது. இதில் 8 செங்குத்து ஏவுதளங்கள் (Vertical Launch Tubes) உள்ளன. இது 3,500 கி.மீ தூரம் வரை பாயும் 8 கே-4 (K-4) பாலிஸ்டிக் ஏவுகணைகளை அல்லது 750 கி.மீ தூரம் பாயும் 24 கே-15 (K-15) சாகரிகா ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. இதன் மூலம், எதிரி நாடுகளின் எல்லைக்குள் நுழையாமலேயே கடலின் ஆழமான பகுதியில் இருந்து துல்லியமாகத் தாக்குதல் நடத்த முடியும்.
இந்த நீர்மூழ்கிக் கப்பல் 83 மெகாவாட் திறன் கொண்ட அணு உலை மூலம் இயங்குவதால், பல மாதங்கள் நீருக்கு அடியிலேயே மறைந்திருந்து செயல்பட முடியும். எதிரி நாட்டு ரேடார்களால் இதைக் கண்டறிவது மிகவும் கடினம். இந்தியாவின் 'நோ ஃபர்ஸ்ட் யூஸ்' (No First Use) கொள்கையின்படி, ஒருவேளை இந்தியா மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டால், கடலுக்கு அடியில் இருந்து உடனடியாகவும் வலிமையாகவும் பதிலடி கொடுக்கும் 'இரண்டாவது தாக்குதல்' (Second Strike) திறனை இது இந்தியாவுக்கு வழங்குகிறது.
ஐஎன்எஸ் அரிதமன் கடற்படையில் இணைவதன் மூலம், ஒரே நேரத்தில் மூன்று அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்கும் வலிமையை இந்தியா முதல்முறையாகப் பெறுகிறது. இது இந்தியாவின் 'அணுசக்தி முக்கூட்டு' (தரை, வான் மற்றும் கடல் வழியாக அணு ஆயுதங்களை ஏவும் திறன்) வலிமையை முழுமையாக்குகிறது. சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க இது ஒரு பெரும் பாதுகாப்பு அரணாக விளங்கும் எனப் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் கருதுகின்றனர்.
