கடந்த சில வாரங்களில் மட்டும் ஸ்வீடன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் ஈரானியத் தொடர்புள்ள சில பயங்கரவாதச் சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கத் தூதரகங்கள், ராணுவத் தளங்கள் மற்றும் யூத வழிபாட்டுத் தலங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டிருந்தன. ஈரான் நேரடியாகப் போரில் ஈடுபடாமல், தனது ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லா போன்ற ஆயுதக் குழுக்களின் மூலம் இத்தகைய தாக்குதல்களை முன்னெடுப்பதாகத் பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர். இது அமெரிக்காவிற்கு நேரடிப் போரை விடப் பெரிய சவாலாக மாறியுள்ளது.
வெறும் ஐரோப்பா மட்டுமன்றி, அமெரிக்காவிற்குள்ளும் இத்தகைய தூங்கும் செல்கள் ஊடுருவி இருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. "அமெரிக்கா தனது எல்லையைப் பாதுகாப்பதில் கோட்டை விட்டுவிட்டது, ஈரானிய ஏஜெண்டுகள் எளிதாக உள்ளே வந்துவிட்டனர்" என செனட்டர் டெட் க்ரூஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் விமர்சித்துள்ளனர். இதையடுத்து, நியூயார்க், வாஷிங்டன் டிசி போன்ற முக்கிய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈரானிய உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் கடந்த காலங்களில் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் தீவிரக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
வரும் வியாழக்கிழமை ஜெனீவாவில் நடைபெறவுள்ள அணுசக்தி பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், அமெரிக்கா ஈரான் மீது வான்வழித் தாக்குதலைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், உலகெங்கிலும் உள்ள தனது தூங்கும் செல்களைச் செயல்படுத்துமாறு ஈரான் உத்தரவிடக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த 'நிழல் போர்' (Shadow War) பிராந்திய மோதலைத் தாண்டி சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்தியர்களும் வெளிநாடுகளில் உள்ள முக்கிய இடங்களில் பயணிக்கும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
