அமைச்சர் வெஸ் ஸ்டீரிங் தனது கண்டனத்தில், "மருத்துவ அறிவியலும் ஆதாரங்களும் மிகவும் தெளிவாக உள்ளன; நெருங்கிய இரத்த உறவுகளுக்குள் நடக்கும் திருமணங்கள் அதிக ஆபத்தானவை மற்றும் பாதுகாப்பற்றவை. இது குழந்தைகளுக்குப் பிறவியிலேயே ஏற்படும் மரபணுக் குறைபாடுகள் மற்றும் தீராத உடல்நலப் பாதிப்புகளை (Birth Defects) உண்டாக்கும் என்பதை நாம் மறைக்க முடியாது" என்று மிகக் கடுமையாகத் தெரிவித்தார். இத்தகைய திருமணங்களால் பிறக்கும் குழந்தைகளுக்குப் பொதுவான குழந்தைகளை விட மரபணுக் கோளாறுகள் ஏற்பட இருமடங்கு வாய்ப்பு இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
சர்ச்சைக்குரிய அந்த என்.எச்.எஸ் அறிக்கையில், உறவுக்குள் நடக்கும் திருமணங்கள் குடும்பப் பிணைப்பை வலுப்படுத்தும் என்றும், பொருளாதாரப் பாதுகாப்பை வழங்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சரின் தலையீட்டைத் தொடர்ந்து அந்த அறிக்கை இணையதளத்தில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டது. பிராட்போர்டு (Bradford) போன்ற நகரங்களில் இத்தகைய திருமணங்கள் அதிகம் நடப்பதையும், அங்கு மரபணுக் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை நாட்டின் மற்ற பகுதிகளை விட அதிகமாக இருப்பதையும் சுட்டிக்காட்டி சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்போது, இது போன்ற தவறான வழிகாட்டுதல்கள் மீண்டும் பரவாமல் இருக்க என்.எச்.எஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. "மக்களுக்குத் தவறான தகவல்களை வழங்குவது சுகாதாரத் துறையின் வேலை அல்ல; அறிவியல்பூர்வமான உண்மைகளை உரக்கச் சொல்லி மக்களைக் காப்பதே எமது கடமை" என்று அமைச்சர் வெஸ் ஸ்டீரிங் உறுதியாகத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பிரித்தானியாவில் கலாச்சாரம் மற்றும் பொது சுகாதாரம் குறித்த ஒரு புதிய விவாதத்தைத் தொடங்கி வைத்துள்ளது.
