மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் ஆட்சி அதிகாரத்தைக் கவிழ்ப்போம் எனச் சபதம் ஏற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேலுடன் இணைந்து இன்று (பிப்ரவரி 28, 2026) அதிகாலை ஒரு மிகப்பெரிய ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியுள்ளார். அமெரிக்காவின் தற்காப்புத் துறையை (Pentagon) 'போர் துறை' (Department of War) எனப் பெயர் மாற்றம் செய்துள்ள ட்ரம்ப், இந்த ராணுவ நடவடிக்கைக்கு 'எபிக் ஃபியூரி' (Operation Epic Fury) எனப் பெயரிட்டுள்ளார். அமெரிக்க மக்களைப் பாதுகாக்கவும், ஈரான் ஆட்சியால் ஏற்படும் அச்சுறுத்தல்களை வேரோடு அழிக்கவும் இந்த நடவடிக்கை அவசியம் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். "அமெரிக்க வீரர்களுக்குச் சேதங்கள் ஏற்படலாம், ஆனால் நம் நாட்டின் பாதுகாப்பே முக்கியம்" என அவர் 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்ட வீடியோவில்எச்சரித்துள்ளார்.
ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அலுவலகத்திற்கு அருகிலேயே முதல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகப் பொதுவெளியில் காணப்படாத 86 வயதான கமேனி, தற்போது தெஹ்ரானில் இல்லை என்றும், அவர் மிகவும் பாதுகாப்பான ரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் உளவுத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெஹ்ரான், இஸ்ஃபஹான் மற்றும் தப்ரீஸ் உள்ளிட்ட ஐந்து முக்கிய நகரங்களில் குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரான் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் அமெரிக்காவைத் தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைத் தயாரிப்புகளை அழிப்பதே இந்தத் தாக்குதலின் முதன்மை நோக்கம் என அமெரிக்கா கூறியுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு 'கொடூரமான பதிலடி' (crushing response) கொடுக்கப்படும் என ஈரான் அறிவித்த சில நிமிடங்களிலேயே, வடக்கு இஸ்ரேல் பகுதியில் தொடர்ச்சியான குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. சனிக்கிழமை காலை 8 மணி அளவில் ஈரானிலிருந்து ஏவப்பட்ட பலிஸ்டிக் ஏவுகணைகளைத் தங்களின் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், பஹ்ரைன் மற்றும் கத்தார் நாடுகளிலும் குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் வருவதால், ஒட்டுமொத்த மத்திய கிழக்கும் ஒரு முழுமையான போரின் விளிம்பிற்குச் தள்ளப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் தங்களின் ஊழியர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளன.
ஈரானிய மக்கள் தங்கள் விதியைத் தாங்களே தீர்மானிக்க வேண்டிய தருணம் இதுவெனக் கூறியுள்ள ட்ரம்ப், அந்நாட்டு ராணுவத்தினர் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இந்த நடவடிக்கையை 'இருத்தலியல் அச்சுறுத்தலை' (existential threat) நீக்கும் செயல் எனப் பாராட்டியுள்ளார். கத்தார் மற்றும் ஈராக்கின் வான்வெளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், சர்வதேச விமானப் போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12 நாட்கள் நடந்த போரை விட, இந்த 'எபிக் ஃபியூரி' நடவடிக்கை மிகக் கடுமையானதாகவும், ஈரானின் ஆட்சி மாற்றத்தை நோக்கமாகக் கொண்டதாகவும் இருக்கும் எனத் தெரிகிறது.
