இந்த விசாரணையின் போது, காவல்துறையினரின் வழக்கமான நடைமுறைப்படி (Standard Police Booking Procedures) ஆண்ட்ரூவின் விரல் ரேகைகள் மற்றும் டிஎன்ஏ (DNA) மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக பிரிட்டனில் கைது செய்யப்படும் எவருக்கும் எவ்வித விதிவிலக்கும் இன்றி இத்தகைய சோதனைகள் நடத்தப்படும். குறிப்பாக, எப்ஸ்டீன் விவகாரத்தில் பாலியல் புகார்கள் நீண்டகாலமாகப் பேசப்படுவதால், இந்த டிஎன்ஏ சேகரிப்பு எதிர்கால ஆதாரங்களுக்காக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
தற்போதைய கைது நடவடிக்கையானது, 2010-ம் ஆண்டு அவர் வர்த்தகத் தூதராக இருந்தபோது, ரகசிய அரசு ஆவணங்களை எப்ஸ்டீனுக்குப் பகிர்ந்தது தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. இருப்பினும், எப்ஸ்டீன் மூலம் கடத்தப்பட்ட பெண்களுடன் ஆண்ட்ரூவுக்கு இருந்த தொடர்பு குறித்து அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட புதிய ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் இந்த விசாரணையில் முக்கியப் பங்கு வகித்துள்ளன. பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்த தனி விசாரணைக்கும் இது வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விசாரணை முடிந்து வெளியே வந்தபோது ஆண்ட்ரூ மிகவும் சோகமாகவும், அதிர்ச்சியடைந்த நிலையிலும் காணப்பட்டார். இதுவரை எந்தவொரு மூத்த அரச குடும்ப உறுப்பினரும் இவ்வளவு நீண்ட நேரம் சிறை அறையில் (Custody Suite) விசாரிக்கப்பட்டதில்லை. "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" எனப் பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ள நிலையில், வரும் நாட்களில் இந்த வழக்கு மேலும் தீவிரமடையும் எனத் தெரிகிறது.
