அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வரும் ஜூன் மாதத்திற்குள் இந்தப் போரை முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். இதற்காக உக்ரைன் தனது சில பகுதிகளை ரஷ்யாவிற்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாகத் தெரிகிறது. ஆனால், "எங்கள் நிலத்தை விட்டுக் கொடுப்பதை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்" என உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்துள்ளார். போர் நிறுத்தத்திற்குப் பிறகு தங்களுக்கு மீண்டும் பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்த பின்னரே நிலம் குறித்த பேச்சுக்கே இடமுண்டு என உக்ரைன் வாதிடுகிறது.
மறுபுறம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது பிடிவாதத்தைக் குறைக்கவில்லை. தான் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு மாகாணங்களையும் முழுமையாக ரஷ்யாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், உக்ரைன் ஒருபோதும் நேட்டோ (NATO) அமைப்பில் சேரக்கூடாது என்றும் அவர் நிபந்தனை விதித்து வருகிறார். ரஷ்யப் பொருளாதாரம் இன்னும் வலுவாக இருப்பதாகக் கருதும் புடின், போரைத் தற்போதைக்கு முடிவுக்குக் கொண்டு வருவதில் பெரிய ஆர்வம் காட்டாமல், காலத்தைக் கடத்தி உக்ரைனை முழுமையாகப் பலவீனப்படுத்தத் திட்டமிடுவதாக ஐரோப்பிய உளவுத்துறை எச்சரிக்கிறது.
தற்போது ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தைகள் எந்த முடிவும் இன்றி பாதியிலேயே நின்றுவிட்டன. ஒருபுறம் அமைதிப் பேச்சு வார்த்தைகள் நடந்தாலும், போர்க்களத்தில் ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்கள் குறைந்தபாடில்லை. இன்று கூட உக்ரைனின் மின்சாரக் கட்டமைப்புகள் மீது ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. 4 ஆண்டுகாலப் போரால் நிலைகுலைந்துள்ள உக்ரைன் மக்கள், ஒரு நிலையான அமைதிக்காகக் காத்திருக்கின்றனர். ஆனால், வல்லரசு நாடுகளின் இந்தச் சதுரங்க ஆட்டத்தில் அமைதி என்பது இப்போதைக்குச் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.
