ஈரானுடன் தற்போது ராஜதந்திர ரீதியான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும், அதில் ஒரு பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்று ட்ரம்ப் அதிருப்தி வெளியிட்டார். போரைத் தவிர்க்க வேண்டுமானால், ஈரான் ஒரு 'ரகசிய வார்த்தையை' (Secret Words) சொல்ல வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். அதாவது, "நாங்கள் இனி ஒருபோதும் அணுஆயுதங்களைத் தயாரிக்க மாட்டோம்" என்ற உறுதியான பிரகடனத்தையே அவர் அந்த ரகசிய வார்த்தையாகக் குறிப்பிடுகிறார். இந்தத் தெளிவான வாக்குறுதி கிடைத்தால் மட்டுமே போர் மேகங்கள் விலகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ட்ரம்ப்பின் இந்தக் குற்றச்சாட்டுகளை ஈரான் அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது. ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகேய், எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ட்ரம்ப்பின் பேச்சுக்கள் அனைத்தும் "பெரிய பொய்கள்" (Great Lies) என்று சாடியுள்ளார். ஈரானின் ஏவுகணைத் திட்டம் தற்காப்பிற்கானது மட்டுமே என்றும், அமெரிக்காவின் நிலப்பரப்பைத் தாக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும் ஈரான் விளக்கம் அளித்துள்ளது. மேலும், 32,000 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாக ட்ரம்ப் கூறிய தகவலையும் ஈரான் மறுத்துள்ளது.
இந்த உச்சகட்ட மோதலுக்கு மத்தியில், நாளை (வியாழக்கிழமை) ஜெனீவாவில் அமெரிக்க மற்றும் ஈரானியத் தூதுவர்கள் மீண்டும் சந்திக்க உள்ளனர். இதுவே போரைத் தவிர்ப்பதற்கான 'கடைசி வாய்ப்பு' என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஒருபுறம் பேச்சுவார்த்தை மேசை, மறுபுறம் இந்தியப் பெருங்கடல் மற்றும் மத்திய கிழக்கில் குவிக்கப்பட்டுள்ள அமெரிக்கப் போர் விமானங்கள் என நிலைமை மிகவும் பதற்றமாக உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் ஈரான் பணிந்து வருமா அல்லது மோதல் தீவிரமடையுமா என்பதை உலகம் உற்று நோக்கி வருகிறது.
-
