பர்மிங்காம் மற்றும் நாட்டிங்ஹாம் போன்ற நகரங்களின் கடை வீதிகளில் மக்கள் நடமாடும் போதே இத்தகைய வன்முறைகள் அரங்கேறுகின்றன. சமீபத்தில் நடைபெற்ற ஒரு மோதலில், சிறுமிகள் தலைமுடியைப் பிடித்து இழுத்துத் தள்ளிக்கொண்டும், மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்தும் தாக்கிய சம்பவம் பொதுமக்களை உறைய வைத்துள்ளது. "நிம்மதியாகக் கடைக்குக் கூடச் செல்ல முடியவில்லை; எப்போது யார் மீது தாக்குதல் நடக்கும் என்று தெரியவில்லை" என உள்ளூர்வாசிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
நிலைமை கையை மீறிச் செல்வதால், பிரித்தானிய போலீசார் தற்போது அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். நகர மையங்களில் நடமாடும் சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் கடைக்கு வருபவர்களை 'மெட்டல் டிடெக்டர்' (Metal Detectors) கருவிகள் மூலம் போலீசார் தீவிரமாகச் சோதித்து வருகின்றனர். கத்திகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களை வைத்திருப்பவர்களைக் கண்டறிய இந்த 'ஸ்கேனிங்' முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் நூற்றுக்கணக்கான கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுவயதுக் குழந்தைகள் இத்தகைய பயங்கரமான குற்றங்களில் ஈடுபடுவது அந்நாட்டுச் சமூகத்தையே கவலையில் ஆழ்த்தியுள்ளது. வறுமை, போதைப்பொருள் புழக்கம் மற்றும் சமூக வலைதளங்களில் பரவும் 'கேங்' (Gang) கலாச்சாரம் ஆகியவைதான் இத்தகைய வன்முறைக்குக் காரணம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அரசாங்கம் உடனடியாகக் கடுமையான சட்டங்களைக் கொண்டு வராவிட்டால், பிரித்தானியாவின் எதிர்காலத் தலைமுறை குற்றவாளிக் கூடாரமாக மாறிவிடும் எனச் சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
