அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் போர் பதற்றம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. கத்தாரில் உள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவ தளமான 'அல் உடெய்ட்' (Al Udeid Air Base) மற்றும் பஹ்ரைனில் உள்ள தளங்களிலிருந்து நூற்றுக்கணக்கான அமெரிக்க வீரர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஈரான் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் சூழலில், ஈரானின் பதில் தாக்குதலிலிருந்து வீரர்களைப் பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த இடமாற்றம் பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு 10 முதல் 15 நாட்கள் வரை மட்டுமே காலக்கெடு விதித்துள்ளார். அதற்குள் அணு ஆயுதக் கொள்கையில் ஈரான் இணங்கி வராவிட்டால், "மிக மோசமான விளைவுகளை" சந்திக்க நேரிடும் என்று அவர் எச்சரித்துள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஈரான் மீது ஒரு குறிப்பிட்ட இலக்குகளை மட்டும் தாக்கும் 'லிமிடெட் ஸ்ட்ரைக்' (Limited Strike) நடத்தும் எண்ணம் தமக்கு இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே 2025 ஜூன் மாதம் ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு நடத்திய நிலையில், தற்போது மீண்டும் ஒரு தாக்குதலுக்குத் தயாராகி வருவது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதிபர் ட்ரம்பின் நெருங்கிய நண்பரும் செனட்டருமான லிண்ட்சே கிரஹாம் (Lindsey Graham), ஈரான் மீது உடனடியாகத் தாக்குதல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். "இந்தக் கப்பல்கள் மற்றும் விமானங்கள் வெறும் அழகுக்காக இங்கு வரவில்லை" என்று குறிப்பிட்ட அவர், அடுத்த 30 நாட்கள் மிகவும் தீர்மானிக்கத்தக்கவை என்று எச்சரித்துள்ளார். இதற்கிடையில், ஈரானும் தனது தரப்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா ஏதேனும் தாக்குதல் நடத்தினால், பிராந்தியத்தில் உள்ள அனைத்து அமெரிக்கத் தளங்களும் தங்களுக்கு "சட்டப்பூர்வமான இலக்குகளாக" மாறும் என்று ஈரான் ஐநா சபையில் தெரிவித்துள்ளது.
தற்போது மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா தனது மிகப்பெரிய ராணுவக் கட்டமைப்பைத் தயார் நிலையில் வைத்துள்ளது. உலகிலேயே மிகப்பெரிய விமானம் தாங்கிப் போர்க்கப்பலான 'யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்டு' (USS Gerald Ford), 'யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்' உள்ளிட்ட கப்பல் குழுக்கள், 100-க்கும் மேற்பட்ட சரக்கு விமானங்கள் மற்றும் போர் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன. உளவுத்துறை தகவல்களின்படி, ஈரான் தனது அணு ஆயுதச் செறிவூட்டலைத் தீவிரப்படுத்தியுள்ளதால், அதைத் தடுக்க ட்ரம்ப் நிர்வாகம் எந்நேரமும் தாக்குதல் உத்தரவைப் பிறப்பிக்கலாம் எனத் தெரிகிறது.
Source : DailyMail -UK- : https://www.dailymail.co.uk/news/article-15581697/us-soldiers-qatar-iran-trump-attacks.html
