தற்போது அமெரிக்கா பயன்படுத்தி வரும் 'ஹார்ம்' (HARM) ஏவுகணைகளை விட, இந்த புதிய ஏவுகணைகள் அதிக தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டவை. குறிப்பாக, சீனாவைப் போன்ற நாடுகள் உருவாக்கி வரும் நவீன வான் பாதுகாப்பு ரேடார்களைச் சமாளிக்க இது உதவும். இந்த ஏவுகணைகள் தரையில் உள்ள ரேடார்கள் மட்டுமன்றி, வானில் பறந்து கொண்டே உளவு பார்க்கும் 'அவாக்ஸ்' (AWACS) விமானங்களையும் இடைமறித்துத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளன. வரும் 2026 மார்ச் மாதத்திற்குள் இதற்கான ஒப்பந்தப் புள்ளிகளைச் சமர்ப்பிக்க நிறுவனங்களுக்குக் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், பிரித்தானியா தலைமையிலான ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் போலந்து (E5 நாடுகள்) இணைந்து "லீப்" (LEAP) என்ற புதிய முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளன. உக்ரைன் போரில் டிரோன்களின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஏவுகணைகளைச் சாதாரண டிரோன்களை அழிக்கப் பயன்படுத்துவது நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. இதைத் தவிர்க்க, குறைந்த விலையிலான வான் பாதுகாப்பு ஆயுதங்கள் மற்றும் தன்னாட்சி (Autonomous) பாதுகாப்புத் தளங்களை உருவாக்க இந்த நாடுகள் கைகோர்த்துள்ளன.
இந்த "லீப்" திட்டத்தின் மூலம் உருவாக்கப்படும் முதல் ரக ஆயுதங்கள் 2027-ம் ஆண்டுக்குள் நேட்டோ வான்வெளியைப் பாதுகாக்கத் தயாராகிவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மலிவான விலையில் எதிரி டிரோன்களை வீழ்த்தும் ஏவுகணைகளைத் தயாரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். அமெரிக்காவின் உயர் தொழில்நுட்ப ஏவுகணைகள் ஒருபுறம், ஐரோப்பாவின் சிக்கனமான வான் பாதுகாப்பு முறைகள் மறுபுறம் என நேட்டோ கூட்டணி தனது பாதுகாப்பு வளையத்தை மேலும் வலுப்படுத்தி வருகிறது.
