மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு சூழலைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்தத் தற்காலிக வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், லெபனானில் உள்ள ஈரானிய ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் அமெரிக்கத் தூதரகத்தைக் குறிவைக்கக்கூடும் என்ற உளவுத்துறை எச்சரிக்கையே இந்த அதிரடி நடவடிக்கைக்கு முக்கியக் காரணமாகும். தூதரகம் தொடர்ந்து இயங்கும் என்றாலும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான அத்தியாவசியப் பணியாளர்கள் மட்டுமே அங்கு தங்கியிருப்பார்கள்.
தூதரகப் பணியாளர்களின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, லெபனானுக்கான பயண எச்சரிக்கையையும் அமெரிக்கா புதுப்பித்துள்ளது. லெபனானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு (Level 4 - Do Not Travel) தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதோடு, தற்போது அங்கு தங்கியிருக்கும் அமெரிக்கர்கள் வணிக ரீதியிலான விமானங்கள் கிடைக்கும் போதே வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், சிரியா மற்றும் இஸ்ரேல் எல்லைப் பகுதிகளில் நிலவும் பதற்றம் காரணமாக, அந்தப் பகுதிகளுக்குச் செல்வதையும் தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒருபுறம் தூதரகப் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டாலும், மறுபுறம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா தனது ராணுவப் பலத்தை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 50 போர் விமானங்கள் இப்பிராந்தியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதேசமயம், வரும் வியாழக்கிழமை (பிப்ரவரி 26) ஜெனீவாவில் அமெரிக்க மற்றும் ஈரானியத் தூதுவர்கள் சந்தித்துப் பேச உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், போர் வெடிப்பதைத் தவிர்க்க முடியாது என்பதால் ஒட்டுமொத்த உலக நாடுகளும் கவலையுடன் கவனித்து வருகின்றன.
