முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷெல் ஒபாமாவை குரங்குகளாகச் சித்தரித்து, அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் சமூக வலைதளத்தில் வெளியான இனவெறி வீடியோ உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய ஒபாமா, "பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு ஒரு காலத்தில் இருந்த கண்ணியமும், வெட்கமும் இப்போது முற்றிலும் மறைந்துவிட்டது" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ட்ரம்ப்பின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், அமெரிக்க அரசியலில் மனிதாபிமானமற்ற சூழல் நிலவுவதாக அவர் சாடியுள்ளார்.
சர்ச்சைக்குரிய அந்த வீடியோவில் 'The Lion Sleeps Tonight' என்ற பாடலுடன் ஒபாமா தம்பதியினரை குரங்குகளாகச் சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதற்கு ஜனநாயகக் கட்சியினர் மட்டுமின்றி, ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். குடியரசுக் கட்சியின் ஒரே கறுப்பின செனட்டரான டிம் ஸ்காட், "வெள்ளை மாளிகையிலிருந்து நான் கண்ட மிக மோசமான இனவெறிச் செயல் இது" என்று விமர்சித்துள்ளார். முதலில் இந்த விவாதங்களைப் 'பொய்' என்று தற்காத்துப் பேசிய வெள்ளை மாளிகை, பின்னர் ஊழியர் ஒருவரின் தவறால் இது நடந்ததாகக் கூறி அந்த வீடியோவை நீக்கியது.
தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "அந்தக் குறிப்பிட்ட பகுதியை நான் பார்க்கவில்லை, நான் எந்தத் தவறும் செய்யவில்லை, அதனால் மன்னிப்பு கேட்கும் எண்ணமும் இல்லை" என்று ட்ரம்ப் பிடிவாதமாகப் பதிலளித்துள்ளார். இது குறித்துப் பேசிய ஒபாமா, "சமூக வலைதளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஒருவிதமான கோமாளித்தனமான காட்சிகள் (Clown Show) அரங்கேறி வருகின்றன. பொதுப் பதவியில் இருப்பவர்கள் மதிக்க வேண்டிய மரபுகள் சிதைக்கப்பட்டுள்ளன" என்று வேதனை தெரிவித்துள்ளார்.
அரசியல் நாகரிகம் இவ்வளவு கீழ்த்தரமாகக் குறைந்துவிட்ட நிலையிலும், அமெரிக்க மக்களில் பெரும்பாலானோர் இத்தகைய செயல்களைக் கண்டு வருத்தமடைவதாகவும், அவர்கள் இன்னும் கண்ணியம் மற்றும் இரக்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும் ஒபாமா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த 47 நிமிட நேர்காணலில், இனவெறித் தாக்குதல்கள் ஒருபுறம் கவனத்தைத் திசைதிருப்பினாலும், அமெரிக்காவின் உண்மையான பண்புகளை மக்கள் இன்னும் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அடுத்த ஆண்டு சிகாகோவில் திறக்கப்படவுள்ள தனது நூலகம் மற்றும் குடியேற்றப் பாதுகாப்பு குறித்த போராட்டங்கள் பற்றியும் அவர் விரிவாகப் பேசியுள்ளார்.
