Election Update
Tamil Nadu Election 2026: Live schedule - Click here
Click Here

டி போட்டுத் தராதது ஒரு குற்றமா ? கோடாரியால் கொத்தியே கொன்ற மாமியார் !

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், பூக்கோட்டுப்பாடம் அருகே உள்ள கூற்றம்பாறை பகுதியில் வசித்து வந்தவர் சாந்தா (58). இவரது மகன் சுனில் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். சுனிலின் மனைவி ரஜிலா (30). இந்த மாமியார் - மருமகள் இடையே நீண்ட நாட்களாகவே குடும்பப் பூசல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை சுனில் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் சாந்தாவும் ரஜிலாவும் அவரது இரண்டு குழந்தைகளும் மட்டுமே இருந்துள்ளனர்.

அப்போது தனக்குக் குடிப்பதற்கு தேநீர் (Tea) போட்டுத் தருமாறு சாந்தா தனது மருமகளிடம் கேட்டுள்ளார். ஆனால், ரஜிலா தேநீர் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற சாந்தா, வீட்டில் விறகு வெட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த அரிவாளை எடுத்து ரஜிலாவைச் சரமாரியாக வெட்டத் தொடங்கினார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரஜிலாவின் பிஞ்சு குழந்தைகள், அலறியபடி தனது பாட்டியைத் தடுக்க முயன்றும் பலனளிக்கவில்லை.

கடுமையான வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரஜிலாவின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டனர். உடனடியாக மலப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், பலத்த காயங்கள் காரணமாகச் சிகிச்சை பலனின்றி ரஜிலா பரிதாபமாக உயிரிழந்தார். பெற்ற தாயை கண்முன்னே இழந்த குழந்தைகளின் கதறல் அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியது.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பூக்கோட்டுப்பாடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஒரு சாதாரண தேநீர் போட்டுத் தராத காரணத்திற்காக மருமகளைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்ட மாமியார் சாந்தாவை போலீசார் கைது செய்தனர். ஒரு சிறு கோபத்தால் ஒரு குடும்பமே சிதைந்து போன இந்தச் சம்பவம் கேரளா மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Share this news: Back to Home