லண்டன் மாநகர மேயர் சாதிக் கானின் "சாலை பாதுகாப்பு" திட்டத்தின் ஒரு பகுதியாக, லண்டன் முழுவதும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட புதிய வேகக் கட்டுப்பாட்டு கேமராக்களை (Speed Cameras) அறிமுகப்படுத்த 'டிரான்ஸ்போர்ட் ஃபார் லண்டன்' (TfL) முடிவு செய்துள்ளது. இந்த புதிய வகை ரேடார் கேமராக்கள் முதற்கட்டமாக ஹாரிங்கே, குரோயிடான் மற்றும் ஈலிங் உள்ளிட்ட பத்து முக்கிய இடங்களில் சோதனை முறையில் பொருத்தப்பட உள்ளன. வாகன ஓட்டிகளின் வேகத்தைக் கண்காணிப்பதில் இதுவரை இருந்த முறைகளை விட இவை மிகவும் மேம்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய 'ரெட்ஸ்பீட் சென்டியோ ஷீல்ட்' (RedSpeed Sentio Shield) கேமராக்களின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால், இவை செயல்படும் போது மின்னல் போன்ற 'பிளாஷ்' (Flash) வெளிச்சத்தை ஏற்படுத்தாது. மேலும், பழைய கேமராக்களைப் போல சாலையின் தரையில் சென்சர்களோ அல்லது வெள்ளை நிறக் கோடுகளோ (White lines) இதற்குத் தேவையில்லை. இதனால் வாகன ஓட்டிகள் தாங்கள் கண்காணிக்கப்படுவதை உணர்வது கடினம். 4K தரம் கொண்ட இந்த கேமராக்கள், வாகனத்தின் ஓட்டுநர் யார் என்பதைத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டிவிடும்.
4D ரேடார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்த கேமராக்கள், ஒரே நேரத்தில் ஐந்து வழிச்சாலையில் இருபுறமும் வரும் வாகனங்களைக் கண்காணிக்கும் திறன் கொண்டவை. குறிப்பாக, கேமராக்களிடம் இருந்து தப்பிக்க 'கோஸ்ட் பிளேட்ஸ்' (Ghost plates - பிரதிபலிப்பு ஸ்டிக்கர் ஒட்டிய எண்கள்) பயன்படுத்தும் வாகனங்களையும் இது எளிதில் கண்டறிந்துவிடும். இரவு நேரத்திலும் பகல் நேரத்தைப் போலவே தெளிவான வண்ணப் படங்களை எடுக்கும் என்பதால், விதிமீறலில் ஈடுபடுபவர்கள் தப்பிப்பது இனி சாத்தியமில்லை.
மேயர் சாதிக் கானின் 'விஷன் ஜீரோ' (Vision Zero) திட்டத்தின் கீழ், 2041-ஆம் ஆண்டிற்குள் லண்டன் சாலைகளில் உயிரிழப்புகளை முற்றிலுமாக ஒழிப்பதே இதன் நோக்கமாகும். இதன் தொடர்ச்சியாக, எஸ்.யு.வி (SUV) ரக வாகனங்களுக்கு கூடுதல் வரி விதிப்பது, லண்டனின் அதிகபட்ச வேக வரம்பை 40 மைல்களாகக் குறைப்பது மற்றும் சீட் பெல்ட் அணியாதவர்களைக் கண்டறிய AI கேமராக்களைப் பயன்படுத்துவது போன்ற அதிரடி நடவடிக்கைகளும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன.
இந்த கேமராக்கள் உயரமான மின்கம்பங்கள் அல்லது தெரு விளக்கு கம்பங்களில் பொருத்தப்படுவதால், அருகில் வரும் வாகன ஓட்டிகளின் கண்ணுக்கு இவை எளிதில் புலப்படாது. இருப்பினும், முன்னெச்சரிக்கையாக சாலைகளில் கேமரா இருப்பதை உணர்த்தும் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்படும் என்று TfL உறுதி அளித்துள்ளது. வேக வரம்பை மீறுபவர்கள் இனி தபால் மூலம் வரும் அபராத நோட்டீஸை நேரடியாகப் பெறும் வரை, தாங்கள் சிக்கியது தெரியாமலேயே இருக்க வாய்ப்புள்ளது.
