நேற்று (01) அதிகாலை குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளம் மீது ஈரான் நடத்திய புதுவகையான பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில், 3 அமெரிக்க ராணுவத்தினர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்; 5 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வருகிறார்கள். இதனை விட மேலும் பல ராணுவத்தினருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகக் குவைத்தில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த ஏவுகணை எப்படி குவைத் நாட்டின் வான் பாதுகாப்பு சிஸ்டத்தைத் தாண்டி வந்தது என்பது அதிர்ச்சி; அதைவிட அதிர்ச்சியான விஷயம், அமெரிக்க வான் பாதுகாப்பு சிஸ்டத்தையும் கடந்து வந்து அது தாக்கியுள்ளதுதான். [US military says three of its service members killed in Iran operation]
ஈரான் மீது நடக்கும் தாக்குதல்களை மட்டும் காட்டி வரும் சர்வதேச தொலைக்காட்சிகள், ஈரான் நடத்திய இந்தத் தாக்குதல் செய்தியை மட்டும் காட்டாமல் மறைத்து வருகின்றன. ஈரான் தனது அண்டை நாடுகளைக் குறிவைத்துத் தாக்க ஆரம்பித்துள்ளது. துபாய், கத்தார், இஸ்ரேல், ஈராக், ஏமன் என்று பல மத்திய கிழக்கு நாடுகளை ஈரான் குறிவைத்துள்ளது. இந்த நாடுகள் அனைத்தும் அமெரிக்காவுக்கு உதவி வருவதோடு, அமெரிக்கத் தளங்களையும் கொண்ட நாடுகள். இதனால் குறித்த நாடுகள் பல இழப்புகளைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக மிக முக்கியமான துபாய் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
இது எத்தனை நாட்கள் நீடிக்கும் என்று கேட்டால் எவரிடமும் பதில் இல்லை. வான்வழியாகத் தாக்கியே ஈரானில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று டொனால்ட் ட்ரம்ப் நம்புகிறார். ஆனால் அதற்குச் சாத்தியமே இல்லை என்று பிரித்தானிய பிரதமர் இன்று (02) குறிப்பிட்டுள்ள விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுபோக பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி உட்பட அனைத்து ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவுக்கு இந்த விஷயத்தில் ஆதரவாக இல்லை.
மேலும், ஈரான் நாட்டைத் தரைவழியாகச் சென்று கைப்பற்றுவது என்பது தற்கொலைக்குச் சமம். ஈரானின் ராணுவக் கட்டமைப்பு என்பது மிகவும் மாறுபட்ட, சிக்கலான ஒரு அமைப்பு. "பாம்பின் தலை வெட்டப்பட்டது" என்று இன்று (02) ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஆனால் உண்மை அதுவல்ல. ஈரானின் ராணுவம் பல பிரிவுகளாக இருக்கிறது; ஒவ்வொரு பிரிவும் தனித்து இயங்கவல்லது. அவற்றுக்குக் கட்டளைப் பீடம் தேவையே இல்லை, ஆனால் அவை ஒரே வலைப்பின்னலில் உள்ளன. இதனால் தலையை வெட்டினாலும் சரி, வாலை வெட்டினாலும் சரி, ஈரான் ராணுவம் தொடர்ந்து இயங்கும். சொல்லப்போனால், அமெரிக்கா ஆரம்பித்த இந்தப் போர் சீக்கிரம் முடியப் போவதில்லை; பல வருடங்கள் நீடிக்க வாய்ப்புகள் உள்ளன.
அலி கமேனி மறைவுக்குப் பின்னர், கடந்த 2 நாட்களில் ஈரான் ராணுவம் மிகவும் துல்லியமாகத் திட்டமிட்டுத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதற்கு ஒரு சிறந்த உதாரணம்: துபாயில் உள்ள அமெரிக்கப் படைத்தளத்தில் இருந்த உயர் அதிகாரிகள், தமது தளம் தாக்கப்படலாம் என்று கருதி ஹோட்டல்களில் தங்கியிருந்தார்கள். இதனைச் சில மணி நேரங்களிலேயே அறிந்த ஈரான், அந்த ஹோட்டல்களை நோக்கிக் ட்ரோன்களை அனுப்பித் தாக்குதல் நடத்தியுள்ளது. தற்போது அமெரிக்க உயர் அதிகாரிகள் தலைமறைவாகி, தம்மை அடையாளப்படுத்தாமல் வேறு இடங்களுக்குச் சென்று தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அலி கமேனி இறந்த உடனே ஈரான் உணர்ச்சிவசப்பட்டுத் தனது முழு பலத்தையும் பிரயோகித்து அமெரிக்கத் தளங்கள், இஸ்ரேல் நிலைகள் மற்றும் அண்டை நாடுகளைத் தாக்கும் என்று அமெரிக்கா கணக்குப் போட்டிருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. ஈரான் மிகவும் துல்லியமாகவும், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலுமே தாக்குதல்களை நடத்தி வருகிறது. அப்படி என்றால், இத்தாக்குதல் காலம் வருடக் கணக்கிற்கு நீளலாம். அண்டை நாடுகளுக்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து, "அமெரிக்கத் தளங்கள் இனி வேண்டாம், வெளியே போங்கள்" என்று அந்த நாடுகள் சொல்லும் அளவிற்கு ஈரானால் அழுத்தம் கொடுக்க முடியும். இதுவே ஈரானின் எதிர்காலப் பாதுகாப்புக்கு உதவும். எனவே, டொனால்ட் ட்ரம்பின் ஆகாயக் கனவில் மண் விழுந்துள்ளது என்பதே உண்மை நிலை.
