வடகொரியாவின் 15-வது உச்ச மக்கள் பேரவைக்கான (Supreme People's Assembly) தேர்தல் கடந்த மார்ச் 15, 2026 அன்று நடைபெற்றது. இதில் எப்போதும் போல 99.99% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால், இம்முறை யாரும் எதிர்பாராத விதமாக 99.93% பேர் மட்டுமே ஆளும் தொழிலாளர் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாகவும், மீதமுள்ள 0.07% பேர் வேட்பாளர்களை நிராகரித்து 'எதிர்ப்பு' வாக்குகளைப் பதிவு செய்துள்ளதாகவும் அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 1957-ஆம் ஆண்டிற்குப் பிறகு வடகொரியத் தேர்தல் வரலாற்றில் அதிகாரப்பூர்வமாக 'எதிர்ப்பு வாக்குகள்' பதிவாகியுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக 100% ஆதரவு என்ற இலக்கோடு நடத்தப்படும் வடகொரியத் தேர்தல்களில், இந்த 0.07% சதவீதத் தரவு இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும், "அந்த 0.07% பேர் இப்போது எங்கே இருக்கிறார்கள்?", "அவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவோம்" என்று கிண்டலாகவும், அச்சத்தோடும் பதிவிட்டு வருகின்றனர். ஒரு சர்வாதிகார நாட்டில் இவ்வளவு சிறிய சதவீத எதிர்ப்பைக் கூட அரசு வெளிப்படையாக அறிவித்திருப்பது, அந்நாடு ஒரு 'ஜனநாயக' முறையைப் பின்பற்றுவது போன்ற தோற்றத்தை உலகிற்குத் தர முயற்சிப்பதையே காட்டுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்தத் தேர்தலில் அதிபர் கிம் ஜாங் உன், சன்சோன் பகுதியில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிக்குச் சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார். மொத்தம் உள்ள 687 தொகுதிகளிலும் தலா ஒரு வேட்பாளர் மட்டுமே நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தத் தேர்தல் முடிவுகள் கிம் ஜாங் உன்னின் அதிகாரத்தை மேலும் ஐந்தாண்டுகளுக்கு உறுதிப்படுத்தியுள்ளன.
வடகொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தேர்தல் முறைப்படி, வாக்காளர்கள் 'ஆம்' அல்லது 'இல்லை' என்று குறிக்கப்பட்ட தனித்தனி பெட்டிகளில் தங்களது வாக்குகளைச் செலுத்தலாம். இந்த மாற்றமே 0.07% எதிர்ப்பு வாக்குகள் பதிவாகக் காரணம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும், ரகசிய வாக்கெடுப்பு முறை இல்லாத ஒரு நாட்டில், கிம் ஜாங் உன்னிற்கு எதிராக வாக்களிப்பது என்பது மிகப்பெரிய துணிச்சலான காரியம் என்று சர்வதேச ஊடகங்கள் விமர்சிக்கின்றன. எது எப்படியோ, இந்தச் சிறு சதவீதத் தரவு வடகொரியாவின் 'ஒற்றைத்தன்மை' கொண்ட அரசியலில் ஒரு சுவாரஸ்யமான பேசுபொருளாக மாறியுள்ளது.
