மத்திய கிழக்கில் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் எரிவாயு விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்த ரஷ்யா பரிசீலித்து வருகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், "ஐரோப்பிய சந்தையை விட, வளர்ந்து வரும் பிற சந்தைகளுக்கு எரிவாயுவை ஏற்றுமதி செய்வது ரஷ்யாவிற்கு அதிக லாபகரமாக இருக்கும்" என்று கூறியுள்ளார். இது ஒரு உடனடி முடிவு அல்லவென்றும், அரசாங்கம் மற்றும் எரிசக்தி நிறுவனங்களுடன் கலந்தாலோசித்த பிறகு இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய எரிசக்தி கொள்கைகள் மற்றும் ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளே இத்தகைய முடிவை எடுக்கத் தள்ளியுள்ளதாக புதின் குற்றம் சாட்டியுள்ளார். "ஐரோப்பிய நாடுகள் தாங்களாகவே ரஷ்ய எரிசக்தியைப் புறக்கணிக்கத் திட்டமிட்டுள்ளதால், நாமே முன்கூட்டியே விநியோகத்தை நிறுத்தினால் என்ன?" என்று அவர் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே உக்ரைன் போருக்குப் பிறகு, ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவிற்கு வரும் எரிவாயு விநியோகம் பெருமளவு குறைந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால், 'ஹார்முஸ் நீரிணை' (Strait of Hormuz) வழியாக நடைபெற வேண்டிய எரிபொருள் மற்றும் எரிவாயு போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை சர்வதேச சந்தையில் 50 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. கத்தார் நாட்டின் மிகப்பெரிய எரிவாயு ஆலை மீதான தாக்குதலால், ஐரோப்பாவிற்குத் தேவையான எரிவாயு விநியோகம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இந்தச் சிக்கலான சூழலில், ரஷ்யாவின் விநியோகக் குறைப்பு அச்சுறுத்தல், ஐரோப்பியப் பொருளாதாரத்தை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இருப்பினும், ரஷ்யா தனது நம்பகமான பங்காளிகளாகக் கருதும் ஸ்லோவாக்கியா மற்றும் ஹங்கேரி போன்ற நாடுகளுக்கு மட்டும் விநியோகத்தைத் தொடர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. மத்திய கிழக்கு போர் நீடித்தால், எரிசக்தி விலைகள் மேலும் உயரக்கூடும், இது ஐரோப்பாவில் பணவீக்கத்தை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ரஷ்யாவின் இந்த நகர்வை, உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் "எரிசக்தி blackmail" (Energy Blackmail 2.0) என விமர்சித்துள்ளன. சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் இந்த நிச்சயமற்ற தன்மை, உலக நாடுகளை மாற்று எரிசக்தி ஆதாரங்களை நோக்கித் தீவிரமாகச் சிந்திக்கத் தூண்டியுள்ளது.
