அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்கள் மூலம், அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் இராணுவக் கட்டமைப்புகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஈரானின் கடற்படை, விமானப்படை மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் (Air detection systems) என அனைத்தும் முடக்கப்பட்டுவிட்டன; கிட்டத்தட்ட ஒவ்வொன்றும் வீழ்த்தப்பட்டுவிட்டன" என்று உறுதிபடக் கூறியுள்ளார்.
'ஆபரேஷன் எபிக் பியூரி' (Operation Epic Fury) என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் இந்த இராணுவ நடவடிக்கையில், இதுவரை 2,000-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) தெரிவித்துள்ளது. ஈரானின் ஏவுகணை தளங்கள் மற்றும் அணுசக்தி உட்கட்டமைப்புகளைச் சிதைப்பதே இந்தத் தாக்குதலின் முதன்மை நோக்கம் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, ஈரானின் 11 போர்க்கப்பல்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது இராணுவத் தலைமையகங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டினார்.
ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டில் ஒரு தற்காலிகத் தலைமைக் குழு (Interim Leadership Council) பதவியேற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் இந்த அதிரடி நகர்வு சர்வதேச ரீதியாகப் பல்வேறு விவாதங்களைத் தோற்றுவித்துள்ளது. குறிப்பாக, அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குப் பிரித்தானியா மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள் முழுமையான ஆதரவு வழங்காதது குறித்து ட்ரம்ப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாகப் பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மரை விமர்சித்த அவர், ஸ்பெயின் உடனான வர்த்தக உறவுகளைத் துண்டிக்கப்போவதாகவும் எச்சரித்துள்ளார். போர் இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கலாம் என ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் வரைபடம் முற்றாக மாறும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
