ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் மறைவைத் தொடர்ந்து, அவருக்கு அடுத்தபடியாக அந்த நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்கக்கூடும் என அமெரிக்காவால் கணிக்கப்பட்டிருந்த அனைத்து முக்கியத் தலைவர்களும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். "இந்தத் தாக்குதல்கள் மிகவும் துல்லியமாகவும் வெற்றிகரமாகவும் நடத்தப்பட்டுள்ளன; நாங்கள் யாரையெல்லாம் அடுத்த தலைவர்களாகக் கருதியிருந்தோமோ, அவர்கள் இப்போது உயிரோடு இல்லை" என்று ஏபிசி (ABC News) ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலுடன் இணைந்து நடத்தப்பட்ட 'ஆபரேஷன் எபிக் பியூரி' (Operation Epic Fury) நடவடிக்கையின் முதல் இரண்டு நாட்களில் மட்டும் ஈரானின் 48 உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. இதில் காமேனியின் பிரதான தேர்வாக இருந்த அவரது தலைமை அதிகாரி அலி அஸ்கர் ஹெஜாசி (Ali Asghar Hejazi) மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநிஜாத் உள்ளிட்டோர் அடங்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் ஈரானின் அரசியல் மற்றும் மத ரீதியான தலைமைத்துவத்தில் ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை அமெரிக்கா திட்டமிட்டு உருவாக்கியுள்ளது.
ஈரானின் அரசியலமைப்பின்படி, புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) தலைமையிலான தற்காலிகக் குழு ஆட்சியைத் தொடர்ந்து வருகிறது. இருப்பினும், அடுத்த வரிசையில் இருந்த இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத் தலைவர்களும் கொல்லப்பட்டுவிட்டதால், ஈரானிய அரசாங்கம் இப்போது ஒரு திசைதெரியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ட்ரம்ப் சுட்டிக்காட்டினார். "அவர்கள் இப்போது பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்கள், ஆனால் அந்த வாய்ப்பு எப்போதோ முடிந்துவிட்டது" என்று அவர் மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மறுபுறம், அமெரிக்காவின் இந்த அதிரடி நகர்வுகள் ஈரானிய மக்கள் மத்தியில் கலவையான உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. ஒருபுறம் ஆட்சி மாற்றத்திற்கான கொண்டாட்டங்கள் தெருக்களில் எதிரொலித்தாலும், ஈரானின் இராணுவத் தளபதிகள் மற்றும் மத குருமார்கள் அமெரிக்காவிற்கு எதிராகப் 'புனிதப் போர்' (Fatwa) அறிவித்துள்ளனர். இந்தப் போர் இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என்றும், ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் தளங்கள் முற்றாகச் சிதைக்கப்படும் வரை பின்வாங்கப் போவதில்லை என்றும் ட்ரம்ப் உறுதிபடக் கூறியுள்ளார்.
