Posted in

அரசியலில் இருந்து ஒதுங்கி ஏலக்காய் மண்டியில் முடங்கிய ஓபிஎஸ்: தவெக மற்றும் அதிமுகவை நோக்கிப் படையெடுக்கும் ஆதரவாளர்கள்!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தென் மாவட்டங்களின் முக்கிய அரசியல் முகமும் முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் (OPS) தற்பொழுது தீவிர அரசியலில் இருந்து முற்றிலும் ஒதுங்கிப் போடிநாயக்கனூரில் உள்ள தனது சொந்த ஏலக்காய் மொத்த வியாபார மண்டியில் முடங்கியுள்ளார். பொது நிகழ்ச்சிகள் மற்றும் தொகுதி சார்ந்த மக்கள் பணிகளை முற்றிலுமாக ஓரங்கட்டிவிட்டு அவர் அமைதி காத்து வருவது அவரது தீவிர ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான்காவது முறையாகப் போடிநாயக்கனூர் தொகுதியில் வென்று சட்டமன்ற உறுப்பினராகியுள்ள ஓபிஎஸ், தனக்கு அதிக வாக்குகள் கிடைத்த ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே நேரில் சென்று நன்றி தெரிவித்துவிட்டு, மற்ற பகுதிகளுக்குச் செல்லாமல் தனது வணிகத்திலேயே முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

நீண்ட நாட்களாக ‘மியூட் மோடில்’ இருக்கும் ஓபிஎஸ்-ஸின் இந்த அரசியல் மந்தநிலையைப் பார்த்த அவரது ஆதரவாளர்கள், தங்களின் எதிர்காலம் கருதி மாற்றுக்கட்சிகளில் இணையத் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஓபிஎஸ்-ஸின் முக்கிய ஆதரவாளர்கள் போடியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடத்தி, தற்போதைய ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைவதற்குப் பெரும்பான்மையாக முடிவெடுத்துள்ளனர். இந்தத் தகவல் ஓபிஎஸ்-ஸின் காதுகளுக்குச் சென்றதும், “இப்போதைக்கு அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம்; பொறுத்திருந்து பாருங்கள்” என்று கூறி, ஆதரவாளர்களை அடிக்கடி நேரில் சந்திப்பதையும் அவர் தற்பொழுது தவிர்த்து வருகிறார்.

ஓபிஎஸ்-ஸின் இந்தத் பிடிபாடற்ற போக்கினால் விரக்தியடைந்த அவரது ‘நிழலாக’ வலம் வந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் பழைய தொண்டர்கள் பலர், தங்களின் தாய் கழகமான அதிமுகவிற்கே (AIADMK) மீண்டும் திரும்பத் தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில், தவெக-விற்குத் தாவத் தயாராக இருக்கும் தனது எஞ்சிய விசுவாசிகளைத் தொடர்புகொண்டு பேசிய ஓபிஎஸ், “அரசியலில் எத்தனை தடவைதான் நாம் வேட்டியையும் கொடியையும் மாற்றுவது? இருக்கும் இடத்திலேயே விசுவாசமாக இருங்கள், காலம் கணிந்து வரும்போது நல்லது நடக்கும்” என்று தற்போதைக்கு அவர்களைச் சமாதானப்படுத்தித் தடுத்து நிறுத்தியுள்ளார்.

ஆனால், ஓபிஎஸ்-ஸின் இந்தச் சமாதானப் பேச்சுகளை அவரது குடும்பத்தினரே முழுமையாக ஏற்பதாகத் தெரியவில்லை. குறிப்பாக, ஓபிஎஸ்-ஸின் மகனும் முன்னாள் எம்பியுமான ஓ.பி. ரவீந்திரநாத் தற்பொழுது முழுமையாக தவெக ஆதரவாளராக மாறி வருவதாகத் தேனி மாவட்ட அரசியல் வட்டாரங்களில் பலத்த பேச்சுகள் அடிபடுகின்றன. தவெக-வின் முக்கிய நிர்வாகிகளுடன் ரவீந்திரநாத் ரகசியத் தொடர்பில் இருந்து வருவதாகவும், விரைவில் அவர் மூலமாக ஓபிஎஸ் முகாமைச் சேர்ந்த ஒரு பெரும் பட்டாளமே முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தவெக-வில் இணைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படும் தகவல், தமிழக அரசியல் களத்தில் தற்பொழுது ஒரு புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *