Posted in

லிப்ட் பழுது விவகாரத்தில் ஆத்திரம்! வங்கி மேலாளரைக் கன்னத்தில் அறைந்த கயல்விழி அழகிரி மீது வழக்குப் பதிவு!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகளும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் பேத்தியுமான கயல்விழி அழகிரி மீது, சென்னை அடையாறில் உள்ள எஸ்பிஐ (SBI) வங்கியின் மேலாளரைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாகக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அடையாறில் கயல்விழி அழகிரிக்குச் சொந்தமான வணிகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் என்.ஆர்.ஐ (NRI) கிளையில் இயங்காமல் இருந்த மின்தூக்கி (Lift) தொடர்பா எழுந்த தகராறில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

கட்டிட பராமரிப்புப் பிரதிநிதி மூலம் பலமுறை முறையிட்டும் லிப்ட் பழுது நீக்கப்படாததால், வங்கி மேலாளர் ஹர்ஷீன் சிங் (Harsheen Singh) கட்டிட உரிமையாளரான கயல்விழி அழகிரியைத் தொலைபேசியில் நேரடியாகத் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார். தன்னை நேரடியாகத் தொடர்புகொண்டதால் ஆத்திரமடைந்த கயல்விழி அழகிரி, வங்கிக்கு நேரில் சென்று மேலாளரிடம் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரது கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தின் காட்சிகள் வங்கியின் கண்காணிப்புக் கேமராவிலும் (CCTV) பதிவாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, வங்கி மேலாளர் தனக்கு நேர்ந்த தாக்குதல் குறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்ததுடன், சிசிடிவி காட்சிப் பதிவுகளையும் பகிர்ந்துகொண்டார். வங்கியின் மண்டல முதன்மை மேலாளர் நமச்சிவாயம் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை அடையாறு காவல் துறையினர் கயல்விழி அழகிரி மீது தகாத வார்த்தைகளால் பேசுதல் (296-b), அத்துமீறி நுழைதல் (329-4), காயப்படுத்துதல் (115-2) மற்றும் குற்றவியல் மிரட்டல் விடுத்தல் (351-2) ஆகிய பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகள் வெளியாகிப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல் துறை அதிகாரிகள் இது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயர் பொறுப்புகளில் இருந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர் வங்கி ஊழியரைத் தாக்கியதாக எழுந்துள்ள இந்த விவகாரம், தமிழக அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பான விவாதப் பொருளாக மாறியுள்ளது.