ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா மொஜ்தபா கமேனி, அந்நாட்டின் முப்படைகள், இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை (IRGC) மற்றும் துணை ராணுவப் படைகளின் காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் 6 புதிய மூத்த ராணுவத் தளபதிகளை நியமித்து அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளார். மத்திய கிழக்கில் போர்ச் சூழல் நிலவி வரும் வேளையில், நாட்டின் பாதுகாப்பையும் படைப் பிரிவுகளின் தயார்நிலையையும் பலப்படுத்தும் நோக்கில் இந்த உயர்மட்ட நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த புதிய நியமனங்களின்படி, ஈரானிய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாக (Chief of Staff) மேஜர் ஜெனரல் அலி அப்துல்லாஹியும், அவரது துணைத் தளபதியாக பிரிகேடியர் ஜெனரல் கியூமர்ஸ் ஹைடாரியும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, சக்திவாய்ந்த இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படையின் (IRGC) தலைமைத் தளபதியாக அஹமத் வாஹிதி நியமிக்கப்பட்டு, அவருக்கு மேஜர் ஜெனரல் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதுடன், அதன் துணைத் தளபதியாக மேஜர் ஜெனரல் மொஸ்தஃபா இஸாதி பொறுப்பேற்றுள்ளார்.
மேலும், ஐஆர்ஜிசி (IRGC) கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் அலி அஸ்மாயியும், நாட்டின் முக்கியமான ‘பசிஜ்’ (Basij) துணை ராணுவப் படையின் தலைவராக ஹுசைன் தாயிப்பும் நியமிக்கப்பட்டுள்ளதாக உச்ச தலைவரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராணுவ அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை அதிகரித்து, நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதே இந்த நியமனங்களின் முதன்மை நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற தாக்குதல்களில் ஈரானின் பல உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்பவே மொஜ்தபா கமேனி இந்த அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளார். புதிய தளபதிகள் அனைவரும் எதிரிகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் தாக்குதல் மற்றும் தற்காப்புத் திறன்களை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று உச்ச தலைவர் உத்தரவிட்டுள்ளார்.