நேரலை என்ற போர்வையிலும், அதிரடிச் செய்தி என்ற போர்வையிலும் தமிழகத்தின் முன்னணித் தொலைக்காட்சி நிறுவனங்களான தினத்தந்தி, பாலிமர் மற்றும் புதிய தலைமுறை உள்ளிட்ட ஊடகங்கள், உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், வெறும் யூகங்களைச் செய்திகளாக வெளியிட்டு மக்களைப் பெருமளவில் இவை குழப்பி வருகின்றன. தங்களின் ‘டிஆர்பி’ (TRP) ரேட்டிங்கிற்காக, நம்பகத்தன்மை இல்லாத டிடிவி தினகரன் போன்றவர்களின் பேட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் உறுதியாகச் செயல்பட்டு வருகின்றனர். ஆனால், ஊடகங்களோ விசிக ஆதரவு கிடைத்துவிட்டது என்றும், முஸ்லிம் லீக் ஆதரவு கிடைத்துவிட்டது என்றும் போட்டி போட்டுக்கொண்டு பொய்களைப் பரப்புகின்றன. இன்று வரை விசிக தலைவர் தொல். திருமாவளவன் தனது அதிகாரப்பூர்வ முடிவை அறிவிக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. விஜய் அவர்கள் விசிக அலுவலகம் செல்வாரா இல்லையா என்பது தமிழக போலீசாருக்கே தெரியாத நிலையில், தொலைக்காட்சி நிலையங்கள் சகட்டுமேனிக்குக் கற்பனை செய்திகளைப் பரப்பி வருகின்றன.
தற்போதைய அரசியல் அலைக்கழிப்புகளால் அதிருப்தியடைந்துள்ள விஜய், “மீண்டும் ஒரு தேர்தல் வந்து மக்கள் தெளிவான தீர்ப்பைத் தந்தால் அதுவே சிறந்தது” என்று தனது நிர்வாகிகளிடம் பேசியதாகத் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஆதவ் அர்ஜுனா மட்டுமே “கடைசி வரை காத்திருந்து பார்ப்போம்” என்று கூறி விஜய்யைத் தடுத்து வருவதாகத் தெரிகிறது. ஒவ்வொரு கட்சியின் வாசலிலும் நின்று ஆதரவு தேட வேண்டிய நிலைக்கு விஜய்யைத் தள்ளியது இந்த அரசியல் சூழலே.
இதற்கிடையில், டிடிவி தினகரன் தனது ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினரை விஜய்யின் அலுவலகத்திற்கு அனுப்பி, ஆதரவு கடிதம் கொடுக்க வைத்துவிட்டு, பின்னர் அது “போலி கடிதம்” என்று ஊடகங்கள் முன் நாடகமாடுகிறார். தவெக வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட பின்னும், சமூகப் பொறுப்பின்றித் தொடர்ந்து தினகரனை அழைத்து ஊடகங்கள் பேட்டி எடுப்பது வேதனையான விஷயம். ஒரு சமூக அக்கறை இல்லாமல் பரபரப்பைத் தேடி அலையும் இத்தகைய ஊடகங்களின் செயல்பாடு தமிழக ஜனநாயகத்திற்கு விடப்பட்ட பெரும் சவாலாகும்.