Posted in

அயர்லாந்து அதிபரின் சகோதரி சிறைபிடிப்பு! காசா உதவிக் கப்பலை மறித்து இஸ்ரேல் அதிரடி; சர்வதேச எல்லையில் நடந்த கடத்தல்!

பாலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு மருந்து மற்றும் உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற ‘குளோபல் சுமுத் பிளோட்டிலா’ கப்பல் படையைச் சைப்ரஸ் அருகே சர்வதேசக் கடல் பகுதியில் வைத்து இஸ்ரேல் ராணுவம் அதிரடியாகத் தாக்கியுள்ளது. இந்தச் சம்பவத்தின் போது, அயர்லாந்து அதிபர் கேத்தரின் கான்னொலியின் சகோதரியும் மருத்துவருமான டாக்டர் மார்கரெட் கான்னொலி (Dr. Margaret Connolly) உட்பட 6-க்கும் மேற்பட்ட அயர்லாந்து குடிமக்களை இஸ்ரேலியப் படைகள் வலுக்கட்டாயமாகக் கைது செய்து ரகசிய இடத்திற்குக் கொண்டு சென்றுள்ளன. சர்வதேசக் கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்து தங்களது நாட்டுப் பிரஜைகளை இஸ்ரேல் ‘கடத்தியுள்ளது’ என்று அயர்லாந்து தரப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்படுவதற்கு முன்பாக டாக்டர் மார்கரெட் கான்னொலி பதிவு செய்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில், “நீங்கள் இந்த வீடியோவைப் பார்க்கிறீர்கள் என்றால், நான் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளால் எனது படகில் இருந்து சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு, இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன் என்று அர்த்தம். காசா மக்களின் பசியைத் தீர்க்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மனிதாபிமானப் பயணத்தில் பங்கேற்பதில் நான் பெருமையடைகிறேன்” என்று அவர் பேசியுள்ளார். தனது சகோதரியின் கைது குறித்து லண்டனில் கவலை தெரிவித்துள்ள அயர்லாந்து அதிபர் கேத்தரின், இந்த நடவடிக்கை மிகவும் அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

துருக்கியின் மர்மாரிஸ் துறைமுகத்தில் இருந்து 39 நாடுகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட ஆர்வலர்களுடன் புறப்பட்ட 50-க்கும் மேற்பட்ட படகுகளில், சுமார் 10 முதல் 28 படகுகளை இஸ்ரேல் கடற்படை முற்றுகையிட்டுள்ளது. சர்வதேச கடல்வழிச் சட்டங்களை மதிக்காமல், காசாவின் கடல்வழித் தடையை நிலைநிறுத்துவதாகக் கூறி இஸ்ரேல் இந்த மிரட்டல் அடியை நிகழ்த்தியுள்ளது. இதற்கிடையே, துருக்கி, கொலம்பியா, பிரேசில், இந்தோனேசியா மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட 10 நாடுகள் இணைந்து இஸ்ரேலின் இந்த அராஜகப் போக்கிற்கு எதிராகக் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலின் இந்த அத்துமீறல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடுமையான ராஜதந்திரப் போரை மூட்டியுள்ளது. அயர்லாந்து ஆர்வலர்கள் தொடர்ந்து இஸ்ரேலால் குறிவைக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, இஸ்ரேல் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என அயர்லாந்து மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் இஸ்ரேலின் இந்தச் செயல்பாடு குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.