சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் (Reuters) வெளியிட்டுள்ள பிரத்யேக அறிக்கையின்படி, சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த ஆண்டு கையெழுத்தான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் (Mutual Defence Pact) கீழ் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சுமார் 8,000 தரைப்படை வீரர்கள், சீனாவுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட 16 மேம்பட்ட ‘ஜேஎஃப்-17’ (JF-17) ரக போர் விமானங்கள் அடங்கிய ஒரு முழுப் படைப்பிரிவு, இரண்டு ட்ரோன் (Drone) படைப்பிரிவுகள் மற்றும் சீனாவின் எச்கியூ-9 (HQ-9) வான் பாதுகாப்பு அமைப்புகள் சவூதி அரேபியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன. சவூதி அரேபியாவின் எல்லைப் பகுதிகள் அல்லது எரிசக்தி மையங்கள் மீது ஈரான் ஏதேனும் தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலடி கொடுக்கவே இந்த போர் தயார்நிலை படை அனுப்பப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த ராணுவப் படவிறக்கத்திற்கான முழுச் செலவுகளையும் சவூதி அரேபியா ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், அதிநவீனப் போர் தளவாடங்களை இயக்குவது மற்றும் பாதுகாப்பது போன்ற முக்கியப் பணிகளைப் பாகிஸ்தான் ராணுவ வீரர்களே நேரடியாக மேற்கொண்டு வருகின்றனர். தற்போதைய சூழலில், இந்தப் படைகள் அதிகாரப்பூர்வமாக ‘ஆலோசனை மற்றும் பயிற்சி’ (Advisory and Training) பணிகளுக்காக மட்டுமே அங்கு தங்கியிருப்பதாகக் கூறப்பட்டாலும், களத்தில் இறங்கிப் போரிடும் முழுத் தகுதியுடன் அவை நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், சவூதிக்கு அச்சுறுத்தல் அதிகரிக்கும் பட்சத்தில், இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி அதிகபட்சமாக 80,000 பாகிஸ்தான் வீரர்கள் வரை சவூதிக்கு அனுப்பப்படலாம் என்ற அதிர்ச்சித் தகவலும் தற்போது கசிந்துள்ளது.
மறுபுறம், இந்த ராணுவ நகர்வு பாகிஸ்தானிற்கு மிகப்பெரிய ராஜதந்திர நெருக்கடியை (Diplomatic Dilemma) ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், தற்போதைய அமெரிக்க-ஈரான் போரில் இரு தரப்பிற்கும் இடையே அமைதியை ஏற்படுத்தி, போர்நிறுத்த ஒப்பந்தத்தைக் கொண்டு வரக்கூடிய முதன்மை ‘மத்தியஸ்தராக’ (Mediator) பாகிஸ்தானே செயல்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில், ஈரானின் அண்டை நாடான பாகிஸ்தான், ஈரானின் முக்கிய எதிரியான சவூதி அரேபியாவிற்கு ராணுவ ரீதியாகப் பக்கபலமாக நிற்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளதால், அதன் நடுநிலையான மத்தியஸ்தர் என்ற பிம்பம் உலகளவில் கேள்விக்குறியாகியுள்ளது.
அரசியல் வல்லுநர்களின் கூற்றுப்படி, வளைகுடா பிராந்தியத்தில் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு எதிராகச் சவூதி அரேபியா தனது வான் பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்ளவே அணுஆயுத நாடான பாகிஸ்தானின் உதவியை நாடியுள்ளது. கடந்த சில வாரங்களாக அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிகப் போர்நிறுத்தம் நிலவி வந்தாலும், பாகிஸ்தானின் இந்த பிரம்மாண்ட ராணுவப் படவிறக்கம் மத்திய கிழக்கில் எப்போது வேண்டுமானாலும் ஒரு மிகப்பெரிய பிராந்தியப் போர் (Regional War) வெடிக்கலாம் என்பதையே காட்டுகிறது. இந்த விவகாரம் குறித்துப் பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபிய அரசுகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகின்றன.