அதிமுக ஆட்சிக் காலத்தில் பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதற்காகத் தொடங்கப்பட்ட ‘அம்மா மருந்தகங்களில்’ வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் புகைப்படங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அதிமுகவின் முக்கிய நிர்வாகியான பாப்புலர் வி. முத்தையா வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், முந்தைய திமுக அரசின் விளம்பரங்களை இன்னும் அரசு நிறுவனங்களில் தொடர விடுவது முறையல்ல என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரால் ஏழை, எளிய மக்களின் நலனுக்காகத் தொடங்கப்பட்ட உன்னதமான திட்டம் தான் அம்மா மருந்தகம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அரசியல் உள்நோக்கத்தோடு இத்திட்டத்தின் அடையாளங்களைச் சிதைக்கும் வகையில் அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலினின் புகைப்படங்கள் மற்றும் விளம்பரப் பலகைகள் அங்கு வலுக்கட்டாயமாக வைக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
தற்போது தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு நிர்வாகத்தை சீரமைத்து வருகிறது. இந்த இக்கட்டான நேரத்தில், கடந்த கால அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் அனைத்து அம்மா மருந்தகங்கள் மற்றும் அரசு பொது நலத் திட்ட மையங்களில் இருந்து மு.க. ஸ்டாலின் தொடர்பான அனைத்து புகைப்படங்களையும், திமுவி-ன் விளம்பரங்களையும் முழுமையாக அகற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், ஜெயலலிதா கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் அதன் அசல் பெயரிலேயே தொடர்ந்து தொய்வின்றி செயல்பட புதிய தவேக அரசு ஆவண செய்ய வேண்டும் என்றும் பாப்புலர் முத்தையா தனது கோரிக்கையில் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசியல் களம் தற்போதைய புதிய அமைச்சரவை மாற்றங்களால் பரபரப்பாக இயங்கி வரும் வேளையில், முந்தைய அரசின் புகைப்படங்களை அகற்றக் கோரும் இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.