Posted in

2064-ல் மனித மக்கள் தொகை பாதியாகக் குறையும்: கணித சமன்பாடு மூலம் விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

உலகளாவிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற நெருக்கடிகள் தொடர்ந்து தீவிரமடைந்தால், வரும் 2064-ஆம் ஆண்டிற்குள் பூமியில் வாழும் மனிதர்களின் ஒட்டுமொத்த மக்கள் தொகை தற்போதைய எண்ணிக்கையில் இருந்து பாதியாகக் குறைய வாய்ப்புள்ளது என்று ஒரு புதிய கணித மாதிரியைக் கொண்டு (Mathematical Model) விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இத்தாலியில் உள்ள மிலன் பல்கலைக்கழகத்தின் இயற்பியலாளர் அலெசியோ சாகோன் மற்றும் லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தின் மறைந்த பேராசிரியர் கோஸ்தியா டிராச்சென்கோ ஆகியோர் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இந்த அதிர்ச்சித் தகவல் ‘கேவோஸ், சாலிடன்ஸ் & ஃபிராக்டல்ஸ்’ (Chaos, Solitons & Fractals) என்ற அறிவியல் இதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 12,000 ஆண்டுகால மனித மக்கள் தொகையின் வளர்ச்சி மற்றும் மாற்றங்களை மிகத் துல்லியமாக ஆராய்ந்து, ஒரு புதிய நேரியல் அல்லாத கணித சமன்பாட்டை (Non-linear Rate-feedback Equation) இந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். கண்ணாடிகள் மற்றும் ஒழுங்கற்ற திடப்பொருட்களின் மூலக்கூறு இயற்பியலை (Physics of disordered systems) ஆராயப் பயன்படும் விதிகளின் அடிப்படையில் இந்த மக்கள் தொகை சமன்பாடு வடிவமைக்கப்பட்டுள்ளது. மனித வரலாற்றின் ஆரம்பக் கால மெதுவான வளர்ச்சி, தொழில்புரட்சி காலத்தின் அசுர வேக வளர்ச்சி மற்றும் 1970-களுக்குப் பிந்தைய மக்கள் தொகை நிலைப்படுத்தல் என அனைத்தையும் இந்த ஒரே ஒரு சமன்பாடு மிகச் சரியாகப் பிரதிபலிக்கிறது.

இந்த ஆய்வின்படி, புவி வெப்பமயமாதல், புதிய கொடிய பெருந்தொற்றுகள், கடுமையான வளப் பற்றாக்குறை அல்லது உலகளாவிய போர்கள் காரணமாகப் பூமியின் தாங்கும் திறன் (Earth’s Carrying Capacity) தற்போதைய 800 கோடிக்கும் அதிகமான அளவில் இருந்து திடீரென 200 கோடியாகக் குறைந்தால் என்ன நடக்கும் என்ற மோசமான சூழல் (Worst-case Scenario) மாதிரி உருவகப்படுத்தப்பட்டது. அப்படி ஒரு திடீர் முறிவு ஏற்பட்டால், அடுத்த 29 ஆண்டுகளுக்குள் பூமியில் இருந்து சுமார் 400 கோடி மனிதர்கள் மறைந்து, 2064-ல் ஒட்டுமொத்த மக்கள் தொகை பாதியாகச் சரிந்துவிடும் என்று இந்த கணித சமன்பாட்டின் முடிவுகள் காட்டுகின்றன.

இருப்பினும், இது ஒரு திட்டவட்டமான கணிப்பு (Forecast) அல்ல என்றும், மனித சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் திடீரென மிக மோசமாக மாறினால் மக்கள் தொகையின் கட்டமைப்பு எவ்வளவு உணர்திறனுடன் (Sensitive) பாதிப்படையும் என்பதைக் காட்டும் ஒரு எச்சரிக்கை மாதிரி மட்டுமே என்றும் ஆய்வாளர் அலெசியோ சாகோன் தெளிவுபடுத்தியுள்ளார் . தற்போதைய உலகளாவிய மக்கள் தொகை வளர்ச்சிப் பாதை ஒப்பீட்டளவில் சீராகவே உள்ளது என்றும், உடனடி வீழ்ச்சிக்கான அறிகுறி எதுவும் இப்போது இல்லை என்றும் கூறியுள்ள விஞ்ஞானிகள், எதிர்காலப் பேரழிவுகளைத் தவிர்க்க இப்போதிலிருந்தே முறையான திட்டமிடல் அவசியம் என்று வலியுறுத்தியுள்ளனர்.