தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே பெண் ஒருவர், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உள்ளூர் நிர்வாகிகள் இருவரால் ஏமாற்றப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் தவெக நிர்வாகிகள் இருவரைப் போலீசார் கைது செய்துள்ள சூழலில், இந்த விவகாரம் ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே புதிய அரசியல் போராக வெடித்துள்ளது.
இச்சம்பவம் குறித்துத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். “திருவைகுண்டம் அருகே பெண் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று, மயக்க மருந்து கொடுத்துப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது” என்று கனிமொழி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தவெக அரசு அமைந்த பிறகு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருவதாகவும், பெண்களுக்கான பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளதாகவும் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். “தேர்தல் காலத்தைப் போலவே இப்போதும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் எதிர்க்கட்சியான திமுக-வின் மீது வீண் பழி போடுவதை முதலமைச்சர் விஜய் உடனடியாக நிறுத்த வேண்டும்; தமிழ்நாட்டில் தங்களது ஆட்சிதான் நடக்கிறது, தாங்கள் தான் ஆளுங்கட்சி என்பதை உணர்ந்து முதலமைச்சர் எப்போது பொறுப்புடன் செயல்படப் போகிறார்?” என அவர் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநிலத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்ட குறுகிய காலத்திலேயே தவெக கட்சியின் முக்கிய நிர்வாகிகளே இத்தகைய கொடூரமான குற்ற வழக்கில் சிக்கித் தூத்துக்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது, முதலமைச்சர் விஜய்க்குப் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி கூட்டத்தில் திமுக-வைச் சீண்டிய முதல்வர் விஜய்க்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, தவெக நிர்வாகிகளின் பாலியல் அராஜகத்தைச் சுட்டிக்காட்டி கனிமொழி எம்பி எழுப்பியுள்ள இந்தக் கேள்வி, தற்போது கோட்டை வட்டாரத்தில் பெரும் விவாதக் கிளப்பியுள்ளது.