Posted in

தானாகவே உருவாகும் புதிய செயற்கை நுண்ணறிவு; மனிதர்களின் கட்டுப்பாடு அழியும்

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான ஆந்த்ரோபிக் (Anthropic), அதிநவீன ஏஐ தொழில்நுட்பங்களின் வளர்ச்சி குறித்து உலக நாடுகளுக்கு அதிரடியான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. குளோட் (Claude) எனப்படும் புகழ்பெற்ற ஏஐ மாதிரிகளை உருவாக்கிய இந்நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், ஏஐ அமைப்புகள் தங்களை தாங்களே சுயாதீனமாக மேம்படுத்திக்கொள்ளும் நிலையை மிக வேகமாக நெருங்கி வருவதாகவும், இந்த எல்லையைத் தாண்டினால் மனிதர்கள் ஏஐ மீதான முழு கட்டுப்பாட்டையும் இழக்க நேரிடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, மிக சக்திவாய்ந்த ஏஐ மாதிரிகளை உருவாக்குவதை உலகளாவிய அளவில் தற்காலிகமாக நிறுத்தி வைக்க (Global Pause) வேண்டும் என்று ஆந்த்ரோபிக் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜேக் கிளார்க் (Jack Clark) மற்றும் கொள்கை பிரிவுத் தலைவர் மரினா ஃபவாரோ ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், ஏஐ துறையில் தற்போது “சுய-மறுவடிவமைப்பு” (Recursive Self-Improvement) என்ற ஆபத்தான கட்டம் தொடங்கிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, ஒரு ஏஐ அமைப்பு மனிதர்களின் உதவி ஏதுமின்றி, தனக்கு அடுத்தபடியாக வரவிருக்கும் இன்னும் சக்திவாய்ந்த ஒரு புதிய ஏஐ மாதிரியைத் தானே முழுமையாக வடிவமைத்து உருவாக்கும் திறனைப் பெறுவதையே இது குறிக்கிறது. இதற்கு ஆதாரமாக, ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் மென்பொருள் குறியீடுகளில் (Codebase) கடந்த மே 2026-ல் மட்டும் சுமார் 80%-க்கும் அதிகமான கோடுகளை மனிதர்களுக்குப் பதிலாக குளோட் ஏஐ அமைப்பே தானாக எழுதியுள்ள அதிர்ச்சித் தகவலையும் நிறுவனம் பகிர்ந்துள்ளது.

இத்தகைய அசுர வேக வளர்ச்சி, மனிதர்களின் சமூகக் கட்டமைப்புகள் மற்றும் பாதுகாப்பு உத்திகளை விடப் பல மடங்கு வேகமாக நகர்வதால், உலக நாடுகள் அனைத்தும் இணைந்து இதற்கு ஒரு கூட்டு “பிரேக் பெடலை” (Brake Pedal) உருவாக்க வேண்டும் என்று ஆந்த்ரோபிக் வலியுறுத்தியுள்ளது. “தற்போது ஏஐ துறையானது வேகத்தை அதிகரிக்கும் ஆக்சிலரேட்டரை மட்டுமே கொண்டுள்ளது, ஆனால் ஆபத்து நேரத்தில் நிறுத்துவதற்கான பிரேக் அதனிடம் இல்லை” என்று ஜேக் கிளார்க் கவலை தெரிவித்துள்ளார். ஏஐ மாதிரிகள் தங்களைத் தாங்களே உருவாக்கிக் கொள்ளும்போது, தற்போதைய ஏஐ-களில் இருக்கும் தவறான தகவல்களைத் தரும் (Hallucinations) குறைபாடுகள் அடுத்தடுத்த தலைமுறைகளில் பலமடங்கு தீவிரமடைந்து, மனிதர்களால் சரிசெய்ய முடியாத பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்று அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

இருப்பினும், பனிப்போர் காலத்தில் அணுஆயுதப் பெருக்கத்தைத் தடுக்கக் கொண்டுவரப்பட்ட சர்வதேச ஒப்பந்தங்களைப் போல, அமெரிக்கா மற்றும் சீனா போன்ற வல்லரசு நாடுகள் மற்றும் முன்னணி ஏஐ நிறுவனங்கள் அனைத்தும் ஒருசேர ஒப்புக்கொண்டால் மட்டுமே இந்தத் தற்காலிகத் தடையை அமல்படுத்த முடியும். ஏதேனும் ஒரு நாடு அல்லது நிறுவனம் மட்டும் தனது ஆராய்ச்சியை நிறுத்தினால், போட்டியாளர்கள் அதை சாதகமாகப் பயன்படுத்தி உலக அரங்கில் முன்னிலை பெற்றுவிடுவார்கள் என்பதால், இதைச் செயல்படுத்துவது மிகக் கடினம் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பை நெருங்கி வரும் ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் இந்த திடீர் எச்சரிக்கை, சிலிக்கான் வேலி மற்றும் சர்வதேச அரசியல் அரங்கில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.