Posted in

துரோகி விஜயபாஸ்கர் ஒழிக!- MLA பதவி ராஜினாமாவால் பட்டாசு வெடித்துக் கொண்டாடிய அதிமுகவினர்!

அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சி. விஜயபாஸ்கர் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளதைத் தொடர்ந்து, புதுக்கோட்டையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் மக்களுக்கு லட்டு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடியுள்ளனர். அதிமுக தலைமை மீது ஏற்பட்ட கடுமையான அதிருப்தி காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த ராஜினாமா ஒட்டுமொத்த தமிழக அரசியல் வட்டாரத்திலும், குறிப்பாக அதிமுக மற்றும் தவெக கட்சியினரிடையே மிகப்பெரிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

சமீபகாலமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சித் தலைமை மீது சி. விஜயபாஸ்கர் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். இதன் தொடர்ச்சியாக, இன்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து தனது சட்டமன்ற உறுப்பினர் பதவிக் கடிதத்தை அவர் ஒப்படைத்தார். அவரது ராஜினாமாவை சபாநாயகர் உடனடியாக ஏற்பதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தமிழக சட்டமன்றத்தில் அதிமுகவின் பலம் 42 ஆகச் சரிந்துள்ளது. மேலும், எம்.எல்.ஏ பதவியைத் துறந்துள்ள விஜயபாஸ்கர், இன்னும் ஓரிரு நாட்களில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளதாகத் தீவிரத் தகவல்கள் கசிந்துள்ளன.

விஜயபாஸ்கரின் இந்தத் திடீர் ராஜினாமா முடிவை அடுத்து, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பழனிவேல் தலைமையில் நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வீதிகளில் திரண்டனர். புதுக்கோட்டை நகரின் முக்கியப் பகுதிகளில் ஒன்று கூடி, தங்களது எதிர்ப்பையும் மகிழ்ச்சியையும் ஒரே நேரத்தில் காட்டும் விதமாக வெடிகளை வெடித்துக் கொண்டாடினர். அப்போது திரண்டிருந்த பொதுமக்களிடம் பேசிய அதிமுக நிர்வாகிகள், “கட்சியால் அத்தனை பதவிகளையும், சுகங்களையும் அனுபவித்துவிட்டு சுயநலத்திற்காகத் துரோகம் செய்துவிட்டு ஓடுகிறார்” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினர்.

கொண்டாட்டத்தின் போது, “கட்சிக்குத் துரோகம் செய்த துரோகி விஜயபாஸ்கர் ஒழிக!” என்று அதிமுகவினர் ஆக்ரோஷமாக முழக்கங்களை எழுப்பியதால் அந்த இடமே பரபரப்பானது. ஏற்கனவே சில முக்கிய அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக-வில் இணைந்துள்ள நிலையில், தற்போது சி. விஜயபாஸ்கரின் இந்த விலகலும், அதற்கு எதிராக அதிமுகவினர் நடத்திய இந்த அதிரடிப் பட்டாசுக் கொண்டாட்டமும் புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் தற்பொழுது மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது.