சிவகங்கை மாவட்டத்தில் ஆண் நண்பருடன் தனிமையில் பேசிக்கொண்டிருந்த பெண் காவலர் ஒருவரிடம் அத்துமீறிப் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தவெக பிரமுகர் உள்ளிட்ட மூவரைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சிவகங்கை பகுதியில் பணியாற்றி வரும் 29 வயதான திருமணமான பெண் காவலர் ஒருவருக்கு, திருப்புவனத்தைச் சேர்ந்த ராபின் (28) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு, ராபின் அந்தப் பெண் காவலரைச் சிவகங்கை அருகேயுள்ள ஒரு காட்டுப் பகுதிக்குத் தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்த போது, ராபினின் நண்பர்களான சித்தலங்குடியைச் சேர்ந்த மகாராஜா (25) மற்றும் ஹரிஷ் (21) ஆகிய இருவர் அங்கு வந்துள்ளனர். இதில் மகாராஜா என்பவர் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உள்ளூர் பிரமுகர் என்று கூறப்படுகிறது. அங்கு வந்த அந்த மூன்று நபர்களும் திடீரெனத் தங்களது புத்தியைக் காட்டி, காட்டுப் பகுதியில் வைத்து அந்தப் பெண் காவலரிடம் மிகக் கொடூரமான முறையில் பாலியல் ரீதியாக அத்துமீறிச் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து கடுமையான போராட்டத்திற்குப் பிறகு தப்பிய அந்தப் பெண் காவலர், உடனடியாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு (Police Control Room) போன் செய்து தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகங்கை நகர் காவல் நிலைய போலீஸார், தப்பியோட முயன்ற ராபின், தவெக பிரமுகர் மகாராஜா மற்றும் ஹரிஷ் ஆகிய மூன்று பேரையும் விரட்டிப் பிடித்துக் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் காவலரை மீட்ட போலீஸார், அவரை மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்துச் சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) ஆர். சிவபிரசாத் மற்றும் டிஎஸ்பி அமலா எட்வின் ஆகியோர் நேரில் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து, சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் ஆபாசமாகப் பேசுதல், பெண்களைத் துன்புறுத்துதல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைதான மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். பெண் காவலருக்கே நேர்ந்த இந்த அவலம் சிவகங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.