Posted in

லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்: விசாரணை நாளில் சிங்கப்பூர் மருத்துவமனைக்கு ஓட்டம் பிடித்த எ.வ.வேலு

கரூர் சாலை அமைக்கும் பணியில் முறைகேடு மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் இல்லம் மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் கடந்த வாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் முடிவில் அவரது வீட்டில் இருந்து சுமார் 40 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த முறைகேடு வழக்கு தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை அதிகாரி முன்னிலையில் எ.வ.வேலு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனச் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால், இன்று விசாரணைக்கு ஆஜராகாத முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்குத் தனது வழக்கறிஞர் மூலமாக அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், தனக்கு ஏற்பட்டுள்ள திடீர் இருதயக் கோளாறு காரணமாக மருத்துவ சிகிச்சைக்காகத் தான் சிங்கப்பூர் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜூன் 27-ஆம் தேதி முதலே தான் வெளிநாட்டில் இருப்பதாகவும், சிங்கப்பூரில் உள்ள பிரபல ‘லைஃப்லைன் ஹார்ட் சென்டர்’ (Lifeline Heart Centre) மருத்துவமனையில் டாக்டர் ஜெயராமலிங்கம் அவர்களின் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருதய சிகிச்சை பெற்று வருவதாகவும் எ.வ.வேலு தனது கடிதத்தில் விளக்கியுள்ளார்.

மேலும், தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இன்னும் 10 நாட்களுக்குத் தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், தற்போதைய லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், சிகிச்சை முடிந்து தமிழ்நாடு திரும்பியவுடன் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் அவர் அந்தக் கடிதத்தில் உறுதியளித்துள்ளார். கடந்த 10 நாட்களாக எ.வ.வேலு தொகுதிப் பக்கமோ அல்லது பொதுவெளியிலோ வராத நிலையில், அவர் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வரும் இந்தத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த பல கார்ப்பரேட் மருத்துவமனைகள் இருப்பதோடு, எ.வ.வேலுவுக்குச் சொந்தமாகவே திருவண்ணாமலையில் ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வரும் சூழலில், அவர் அவசர அவசரமாகச் சிங்கப்பூர் சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் எந்த நேரத்திலும் தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே, கைது நடவடிக்கையைத் தவிர்க்க அவர் சிங்கப்பூருக்குச் சென்று தலைமறைவாகிவிட்டாரா என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. இந்த மர்மமான வெளிநாட்டுப் பயணம் மற்றும் மருத்துவக் கடித விவகாரம் தமிழக அரசியல் களத்தில் தற்போதைய பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *