தமிழ்நாட்டில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய தமிழக வெற்றிக் கழக (TVK) அரசைத் தந்திரமாகக் கவிழ்க்க, ஒரு பிரபல கார்ப்பரேட் நிறுவனம் மிகப்பெரிய அளவில் நிதி வழங்கி சதித் திட்டத்தில் ஈடுபட்டிருப்பது சென்னை காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தவெக சட்டமன்ற உறுப்பினர்களைக் கோடிக்கணக்கான ரூபாய் பணம் கொடுத்து விலைக்கு வாங்க முயன்ற வழக்கில் கைதான திருநாவுக்கரசு உள்ளிட்ட நபர்கள் அளித்துள்ள வாக்குமூலம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெக அரசை எப்படியாவது கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கில், குறிப்பிட்ட ஒரு கார்ப்பரேட் நிறுவனம் தங்களை அணுகி இந்த ரகசிய அசைன்மென்ட்டை (Assignment) வழங்கியதாக அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அறைகளை எடுத்துத் தங்கி, இந்த சதித் திட்டம் அரங்கேற்றப்பட்டுள்ளது. கைதான நபர்களைத் தங்கு வைக்கவும், அவர்களுக்குத் தேவையான ஆடம்பர வசதிகள் மற்றும் உணவுகளை வழங்கவும் அந்த கார்ப்பரேட் நிறுவனத்தின் அதிபர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் நேரடியாக வந்து சந்திப்புகளை நடத்தியுள்ளனர். தவெக-வின் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா உள்ளிட்ட சில முக்கிய எம்.எல்.ஏ-க்களைக் குதிரை பேரம் மூலம் இழுப்பதற்காக, அந்த கார்ப்பரேட் நிறுவனம் சுமார் 150 கோடி முதல் 180 கோடி ரூபாய் வரை பிரத்யேகமாக நிதி ஒதுக்கீடு செய்திருந்ததாகக் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்த சதித் திட்டத்தின்படி, பர்சேஸ் (Purchase) செய்யப்பட வேண்டிய எம்.எல்.ஏ-க்களின் பட்டியலையும் அந்த நிறுவனமே தயாரித்துக் கொடுத்துள்ளது. இதற்காகத் தரகர்களாகச் செயல்பட்ட கைதான நபர்கள், பல தவெக எம்.எல்.ஏ-க்களைத் ரகசியமாகத் தொடர்பு கொண்டு, கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் எவரும் இந்த ஆசை வார்த்தைகளுக்கு இணங்கி அங்கு வராததாலும், தங்களின் நேர்மையான நிலைப்பாட்டைக் கட்சித் தலைமைக்குத் தெரியப்படுத்தியதாலும் இந்த ரகசியத் திட்டம் கசிந்தது. தகவல் வெளியே கசிந்ததை உணர்ந்த கார்ப்பரேட் நிர்வாகிகளும், கைதான நபர்களும் அவசர அவசரமாக ஹோட்டல் அறைகளைக் காலி செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
தற்போது இந்த விவகாரத்தில் சென்னை காவல்துறையின் தனிப்படைகள் தீவிர விசாரணையில் இறங்கி, சதியில் ஈடுபட்ட முக்கியத் தரகர்களைக் கைது செய்துள்ளனர். மேலும், இந்தச் சதித் திட்டத்தின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்ட அந்த கார்ப்பரேட் நிறுவனத்தின் அதிபர் மற்றும் அதன் முக்கிய மேலாளர்கள் யார் என்பதைப் போலீசார் துல்லியமாகக் கண்டறிந்துள்ளனர். இன்னும் ஒரு சில நாட்களில் சம்பந்தப்பட்ட கார்ப்பரேட் அதிபருக்குச் சம்மன் அனுப்பி நேரில் வரவழைக்க அல்லது நேரடியாகச் சென்று கைது செய்யக் காவல்துறையினர் பட்டியலைத் தயாரித்துள்ளனர். தவெக அரசை ஐந்து ஆண்டுகள் முழுமையாக நடத்த விடமாட்டோம் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில், கார்ப்பரேட் நிறுவனத்தின் இந்த 180 கோடி ரூபாய் பேரம் மற்றும் ஆட்சி கவிழ்ப்பு சதி அம்பலமாகியிருப்பது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.