Posted in

பெண் பொலிஸ் அதிகாரியையே SAFE-HOUSE கொண்டு சென்று பாதுகாக்கும் பிரிட்டன் உளவுத்துறை !

இரவின் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு அந்த அபாயக் குரல் ஒலித்தது, “என்னால் மூச்சுவிட முடியவில்லை… என்னை யாரோ குத்திவிட்டார்கள்!” ஆனால், சட்டத்தின் பாதுகாவலர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொண்ட அந்த அதிகாரிகளின் காதுகளில் அந்த மரண ஓலம் விழவில்லை. மாறாக, ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த 18 வயது கல்லூரி மாணவனின் கைகளில் இரும்பு விலங்குகளைப் பூட்டினாள் ஒரு பெண் போலீஸ் அதிகாரி. அதே நேரத்தில், கையில் ரத்தம் சொட்டும் எட்டு இன்ச் கத்தியோடு, தன் தலைப்பாகையைக் கழற்றி எறிந்துவிட்டு, “இவன் என்னைத் தாக்கினான்” என்று பச்சையாகப் பொய் சொன்ன நிஜக் கொலையாளி எந்தவொரு தடையுமின்றி சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருந்தான். இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் (Southampton) நகரில் நடந்த இந்த கொடூரக் கூத்துதான் இன்று ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியெடுத்துக் கொண்டிருக்கிறது.

ஆனால், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் அதைவிடப் பயங்கரமான ஒரு நிழல் யுத்தம் சமூக வலைத்தளங்களில் வெடித்தது. “இதோ இவள்தான் அந்த கொலையாளி போலீஸ்!” என்ற வாசகத்துடன் ஒரு பெண் அதிகாரியின் புகைப்படமும் பெயரும் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவியது. லட்சக்கணக்கான நெட்டிசன்கள் அவளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கலகக் குரல் எழுப்பினர். அந்த ஒற்றைப் புகைப்படம் அவளது நிம்மதியைப் பறித்தது, அவளது வீட்டின் கதவுகளை வன்முறைக் கும்பல் தட்டத் தொடங்கியது. தப்ப வழியில்லாத அந்தப் பெண், தன் உயிரைக் காத்துக் கொள்ள இன்று ஒரு ரகசியப் பாதுகாப்பு இல்லத்தில் (Safe House) தஞ்சம் புகுந்திருக்கிறாள். ஆனால், இங்கேதான் அந்த அதிர்ச்சியூட்டும் ட்விஸ்ட் ஒளிந்திருக்கிறது — இணைய உலகத்தால் ‘கொலையாளி’ என்று முத்திரை குத்தப்பட்ட அந்தப் பெண்ணுக்கும், அன்றிரவு நடந்த கொடூரக் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!

ஆம், Christi Hill என்ற அந்த 12 வருட அனுபவமுள்ள முன்னாள் பெண் காவல்துறை அதிகாரி, இந்தக் கொலை நடப்பதற்கு 20 மாதங்களுக்கு முன்பே (ஏப்ரல் 2024 இல்) தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பியவர். ஆனால், செயற்கை நுண்ணறிவு (AI) தளமான Grok மற்றும் சமூக வலைத்தளங்களின் தவறான அல்காரிதம்கள், கடந்த கால வீரதீர விருதுச் செய்தி ஒன்றில் இருந்த அவளது புகைப்படத்தைத் தவறாக எடுத்து, அவள்தான் ஹென்றி நோவாக்கைக் (Henry Nowak) கையாண்ட அதிகாரி என்று பொய் விபரத்தைப் பரப்பிவிட்டன. உண்மைத் தரவுகளைச் சரிபார்க்காத டிஜிட்டல் உலகம், ஒரு அப்பாவிப் பெண்ணை மரண பயத்தின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது.

தற்போது இங்கிலாந்து உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) வரை இந்த விவகாரம் சென்றுள்ளது. “டிஜிட்டல் வதந்திகளால் மற்றொரு ஆண் அதிகாரியும் வீட்டை விட்டு விரட்டப்பட்டுள்ளார், இந்த வதந்திகள் ஆபத்தானவை” என எச்சரித்துள்ளார். நிஜக் கொலையாளி விக்ரம் திக்வாவுக்கு (Vickrum Digwa) 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், போலீசாரின் தவறான அணுகுமுறையால் சவுதாம்ப்டன் தெருக்களில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. போலீஸ் துறையின் அலட்சியமும், இணையத்தின் கண்மூடித்தனமான வதந்திகளும் சேர்ந்து, நிஜக் கொலைக் களத்தை விடப் பயங்கரமான ஒரு வேட்டையை ஒரு அப்பாவிப் பெண் அதிகாரிக்கு எதிராகத் கட்டவிழ்த்து விட்டுள்ளன என்பதே தற்போதைய நிதர்சனம்.