நீதிமன்றத்தில் விஷாலின் கோரிக்கையை ஏற்ற லைகா நிறுவனம்!

நீதிமன்றத்தில் விஷாலின் கோரிக்கையை ஏற்ற லைகா நிறுவனம்!

நடிகர் விஷால் லைகா நிறுவனத்துக்குக் கொடுக்க வேண்டிய கடன் தொகையை திருப்பி தரவில்லை எனக் கூறி லைகா நிறுவனம் அவர் மேல் வழக்கு தொடர்ந்துள்ளது. இது சம்மந்தமாக விஷால் தன்னுடைய சொத்துகளை தாக்கல் செய்யவேண்டும் என நீதிமன்றம் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் விஷால் இப்போது லைகா நிறுவனத்தின் சொத்துகளை முடக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் “என்னுடைய `விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ பட நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான சண்டக்கோழி-2 திரைப்டத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்க மற்றும் சாட்டிலைட் வெளியீடு உரிமைக்காக லைகா நிறுவனத்துடன், 2018-ம் ஆண்டு 23 கோடியே 21 லட்சத்திற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி படம் வெளியிடப்பட்டது.

அதற்கான 12 சதவிகித ஜி.எஸ்.டி தொகையை லைகா பட நிறுவனம் செலுத்தாததால், அபராரத தொகையுடன் சேர்த்து 4 கோடியே 88 லட்சம் ரூபாயை நான் செலுத்தியுள்ளேன். என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய லைகா நிறுவனம், பல இடங்களில் கடன் பெற்று 500 கோடி ரூபாய் செலவில் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் `இந்தியன் 2′ படத்தை தயாரித்து வருகிறது. இந்த படம் சரியாக ஓடவில்லை என்றால், கடுமையான நிதி நெருக்கடியை லைகா நிறுவனம் சந்திக்க நேரிடும். அப்படி நடந்தால், எனக்கு கிடைக்க வேண்டிய தொகை கிடைக்காமல் போய்விடும் என பயப்படுகிறேன்.

லைகா நிறுவனம் ஒரு வெளிநாட்டு நிறுவனம் என்பதால், நிறுவனத்தை மூடிவிட்டு தயாரிப்பாளர் வெளிநாட்டிற்கு தப்பி செல்வதற்கும் வாய்ப்பிருக்கிறது. எனவே, நான் செலுத்திய ஜி.எஸ்.டி தொகை மற்றும் அபராதத் தொகையை, வட்டியுடன் சேர்த்து 5,24,10,423 ரூபாயை திருப்பித் தருவதற்கான உத்தரவாதத்தை செலுத்த லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும். மேலும் இந்த வழக்கு முடியும் வரை RBL வங்கியில் லைகா நிறுவனம் தாக்கல் செய்துள்ள சொத்துகளை முடக்க வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நீதிமன்றத்தில் நடந்த போது விஷால் தரப்பு வழக்கறிஞர் ”தங்கள் நிறுவனத்துடனான பண பரிவர்த்தனை பற்றி ஆய்வு செய்ய ஆடிட்டர் ஒருவரை நியமிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார். அதை லைகா தரப்பு ஏற்றுக்கொண்டது. இதனால் இந்த வழக்கு சுமூகமாக முடிவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.