டெல்லியில் நீட் (NEET) தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், நாடு முழுவதும் எழுந்த மக்களின் எதிர்ப்பால் மத்திய அரசு வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றது போல, விரைவிலேயே நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும் என்று தமிழகப் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். டெல்லியில் அமைதி வழியில் போராடிய மாணவர்கள் மீது காவல் துறையினர் மேற்கொண்ட அடக்குமுறைகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள அவர், போராட்டத்திற்குத் தவெக அரசின் சார்பில் முழு ஆதரவை அளித்துள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய மாணவர்களின் பேரணியைத் தடுத்து நிறுத்தி, ஜனநாயகப்பூர்வமாகப் போராடியவர்களைக் கைது செய்த மத்திய அரசின் நடவடிக்கை அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் என்று அமைச்சர் சாடியுள்ளார். “எதிர்ப்புக் குரல்களை அடக்குமுறையால் நசுக்கிவிட முடியாது. நீட் தேர்வுக்கு எதிரான முதல் எதிர்ப்புக் குரல் தமிழகத்தில் இருந்துதான் ஒலித்தது; இன்று அது நாடு தழுவிய பெருங்குரலாக உருவெடுத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ள அவர், மாணவர்களின் அரசியலமைப்பு உரிமைகளுக்காகத் தமிழக அரசு என்றும் துணைநிற்கும் என உறுதி அளித்துள்ளார்.
கடந்த காலத்தில் நாடு தழுவிய போராட்டங்களின் மூலம் விவசாயிகளின் குரலுக்குப் பணிந்து மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, அதேபோன்று மாணவர்களின் இந்தத் தொடர் போராட்டமும் மத்திய அரசை பணிய வைக்கும் என்றார். நீட் தேர்வை முற்றிலும் ஒழிப்பதுடன், மருத்துவச் சேர்க்கை உரிமைகளை மீண்டும் மாநில அரசிடமே ஒப்படைப்பதே இதற்கான நியாயமான தீர்வாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கல்வித்துறையை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு (State List) மாற்ற வேண்டும் என்பதில் தவெக அரசு உறுதியாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கல்வி உரிமைகளுக்காகப் போராடும் மாணவர் அமைப்புகளின் பின்னால் தமிழக அரசு முழு பலத்துடன் நிற்கும் என மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார். டெல்லி போராட்டத்தின் எதிரொலியாக நாடு முழுவதும் நீட் எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வரும் சூழலில், அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் இந்த அறிக்கை தேசிய அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது